Sunday, September 17, 2017

கவிஞர் ஆத்மாநாம் விருது - 2017

தமது முன்னோடியான கவிதைகள் மூலமாக நவீன தமிழ்க் கவிதைக்குக் காத்திரமான பங்களிப்பை வழங்கியுள்ளவர்களைக் குறித்து யோசிக்கும்பொழுது தவறாமல் நினைவுக்கு வரும் கவி ஆளுமை கவிஞர் ஆத்மாநாம்.


தமிழ் நவீனக் கவிதையின் செழுமையான காலகட்டமான 1970களில் தனது ஈடுபாடுமிக்க கவி ஆர்வத்தைக் கவிதைகள், கவிதையியல் பற்றிய உரையாடல், கவிதைக்கென ஒரு பத்திரிகை, கவிதை மொழிபெயர்ப்பு எனப் பன்முகமான பங்களிப்பின் மூலமாக வழங்கியவர் ஆத்மாநாம்.

கவிஞர் ஆத்மாநாம் அவர்களின் இலக்கியப் பங்களிப்புகளை நினைவூட்டும் வகையிலும் கொண்டாடும் வகையிலும்  மெய்ப்பொருள் பதிப்பகம் 'கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளை'யைக் கடந்த 2015ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் கவிஞர் ஆத்மாநாம் பெயரில் ரூ.25,000 பரிசுத்தொகையும் விருதும் வழங்கி வருகிறது.
2015ஆம் ஆண்டு கவிஞர் இசை அவர்களுக்கும் 2016ஆம்  ஆண்டு  ‘மீகாமம்’ தொகுப்புக்காகக் கவிஞர் க.மோகனரங்கன் அவர்களுக்கும் ‘கவிஞர் ஆத்மாநாம் விருது’ வழங்கப்பட்டது. 

முதற்கட்டமாகக் கவிஞர் கலாப்ரியாவை நெறியாளராகக் கொண்டு கவிஞர் சுகுமாரன், எழுத்தாளர் பெருமாள்முருகன், கவிஞர் க. மோகனரங்கன் ஆகியோர் அடங்கிய நடுவர் குழு 
 2017ஆம் ஆண்டுக்கான கவிஞர் ஆத்மாநாம் விருதுக்குரிய கவிதைத் தொகுப்பை, விருதாளரைத் தேர்ந்தெடுக்கச் செயல்பட்டது. அக்குழு டிசம்பர் 2013 முதல் டிசம்பர் 2016 வரை வெளிவந்த கவிதை நூல்களிலிருந்து தேர்ந்தெடுத்து அளித்த  தேர்வுச் சிறுபட்டியல் 2017 மே மாதம் வெளியிடப்பட்டது. 

இரண்டடுக்குத் தேர்வு முறையில் விதிகளுக்கு உட்பட்டு அச்சிறு பட்டியலிலிருந்து கவிஞர் சுகுமாரன் அவர்களின் தலைமையில் எழுத்தாளர் பெருமாள்முருகன், கவிஞர் க.மோகனரங்கன் ஆகியோர் அடங்கிய நடுவர் குழு விருதாளரைத் தேர்வுசெய்து சமர்ப்பித்தது.  நடுவர் குழுவின் முடிவின்படி இந்த ஆண்டுக்கான ரூ.25000/- பரிசுத் தொகை அடங்கிய கவிஞர் ஆத்மாநாம் விருது  ‘பெருங்கடல் போடுகிறேன்’ தொகுப்புக்காகக் கவிஞர் அனார் அவர்களுக்கு வழங்கப்படுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்.

மூன்றாம் ஆண்டில் கவிஞர்ஆத்மாநாம் அறக்கட்டளை பிற மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட கவிதைத் தொகுப்புகளுக்கு இந்த ஆண்டிலிருந்து ‘கவிஞர்ஆத்மாநாம் மொழிபெயர்ப்பு விருது - 2017
விருதினை வழங்க முடிவு செய்து, தேர்ந்தெடுக்கப்படும் தொகுப்பிற்கு ரூபாய் 10,000/- உள்ளடக்கிய 'கவிஞர் ஆத்மாநாம் மொழிபெயர்ப்பு விருது'ம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தோம்.

மொழிபெயர்ப்பாளர்கள் ஆர். சிவகுமார், ஜி. குப்புசாமி, எழுத்தாளர்  ஸ்டாலின் ராஜாங்கம் ஆகியோர்  நடுவர்களாகச் செயல்பட்டு டிசம்பர் 2013 முதல் டிசம்பர் 2016 வரை வெளிவந்த கவிதை நூல்களிலிருந்து 2017ஆம் ஆண்டுக்கான கவிஞர் ஆத்மாநாம் மொழிபெயர்ப்பு விருதுக்குரிய கவிதைத் தொகுதியை, விருதாளரைத் தேர்ந்தெடுக்கக் கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளைக்கு அனுப்பிய முதற்கட்டத் தேர்வுச் சிறுபட்டியல் 2017 மே மாதம் வெளியிடப்பட்டது.

இரண்டடுக்குத் தேர்வு முறையில் விதிகளுக்கு உட்பட்டு அச்சிறுபட்டியலிலிருந்து நடுவர் குழு  விருதாளரைத் தேர்வுசெய்து சமர்ப்பித்தது. அம்முடிவின்படி இந்த ஆண்டுக்கான ரூ.10000/- பரிசுத் தொகை அடங்கிய கவிஞர் ஆத்மாநாம் மொழிபெயர்ப்பு விருது - 2017    ‘தாகங்கொண்ட மீனொன்று: ஜலாலுத்தின் ரூமி’ கவிதை நூலுக்காக  என். சத்தியமூர்த்தி அவர்களுக்கு வழங்கப்படுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்.

பரிந்துரையாளர்கள், தேர்வுக்குழுவினர் ஆகியோருக்கு எங்கள் அன்பான நன்றி.
கவிஞர் அனார், என். சத்தியமூர்த்தி அவர்களுக்கு வாழ்த்துகள்.
இந்த ஆண்டுக்கான (2017) விருதுவிழா வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெறும்.
-       கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளை,
 சென்னை.


Poet Atmanam Awards 2017

We cordially invite you to join us for Atmanam award function on Saturday, 30th of September  2017 from 05:00 to 7:30 P.M at Kaviko mandram, Mylapore - Chennai.

About Trust:

Atmanam Trust, a registered body instituted to commemorate the memory of the Tamil poet Atmanam (1951-1984), has been functioning from 2014. Right from its inception, it has been contributing significantly to poetry, poetics and contemporary Tamil literature. It presents an annual award to a Tamil poetry collection. 

The inaugural Atmanam Award for poetry was presented to Isai in 2015 in Chennai by the Kannada poet and playwright H.S. Shivaprakash. The second annual award was given to K. Mohanarangan for his collection of poems ‘Meekaamam’  in2016 in Erode. The Malayalam poet Anitha Thambi was the chief guest. 

Besides according awards to writers, the Trust organizes seminars and critical review meetings on the works of contemporary Tamil writers. A seminar on the works of Sukumaran, ‘Sukumaran – 60,’ and a review meeting on a five-novel compendium, ‘Kanavuchirai’ by Devakanthan, were organised in Chennai. 

The 2017 award for poetry goes to Anar for her collection of poems ‘Perungadal  Podukiren.’ The Trust has founded another annual award in the name of Atmanam to a book of poems translated from other languages into Tamil. N. Sathyamoorthy gets the inaugural award for the same for his translation of Rumi poems from English entitled ‘DhakamKonda Meenondru.’ The 2017 award function will be held in Chennai on 30th Sept 2017. Professor K. Sachidanandan, the Malayalam poet and critic, will give away the two awards. The Trust publishes annually a collection of articles on the award winning works.  

Thank you.

- Atmanam Trust, Chennai.

Thursday, August 11, 2016

விடம்பனம் நாவல் வெளியீட்டு நிகழ்வு


மொழிபெயர்ப்புக் கருத்தரங்கம் ஒன்றில் பங்கேற்க ஜி.குப்புசமி வந்திருந்தார். உடன் வந்திருந்த நண்பர் ஒருவர் "நண்பா... உங்கள ஃபேஸ்புக்ல பார்த்திருக்கேன்" என்றார்.

"ஓ... சரி சரி..." என்று சிரித்துவிட்டு நகர்ந்தேன்.

மறுபடியும் அந்த மனிதரைச் சந்திப்பேன் என்று அப்பொழுது எனக்குத் தெரியாது.

தி. ஜனகிராமன் முழுத்தொகுப்பு கொண்டுவந்த போது ஆனந்த விகடன், கல்கி, ரோஜா முத்தையா நூகலம் என நண்பர் சுகுமாரன் சென்னையில் சுழன்று சுழன்று சுற்றிக் கொண்டிருந்தார். கணையாழியில் வந்த தி.ஜாவின் கதைகளைப் பிரதி எடுக்க வேண்டி கணையாழி அலுவலகத்துக்குச் சென்றோம். ஜிகேவுடன் சந்தித்த அதே மனிதர்.

அவர்தான் கணையாழி இதழின் இணையாசிரியர் என்று அப்பொழுதும் எனக்குத் தெரியாது.

இந்த மனிதர் பாரபட்சமின்றி பின்னாட்களில் என்னைக் கழுவிக் கழுவி ஊற்றப் போகிறார் என்பதும் அப்பொழுது எனக்குத் தெரியாது.

கணையாழி குழுவில் சேர்ந்து வேலை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டபோது சீனிவாசனுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. ஒரு தீவிர வாசகர் என்று மட்டுமே நினைத்திருந்த சீனிவாசன் - பின்னிரவு நாளொன்றின் உரையாடலில் -  கீழத் தஞ்சை சார்ந்த நாவலொன்றை  எழுதிக் கொண்டிருப்பதாகக் கூறினார்.

"படித்துப் பார்க்கக் கிடைக்குமா?"

- இதுபோன்று ஆர்வக் கோலாரில் பேசி எச்சில் முழுங்கும் சம்பவங்களும் ஏற்பட்டதுண்டு. ஆகவே, சிறிது நேரம் மெளனித்திருந்தேன். ஊதிய சிகெரெட்டின் புகையை வானத்தைப் பார்த்து விட்டவாறு,

"நண்பா... கொஞ்சம் போல வாய்ஸ் ரெக்கார்ட் பண்ணி சில நண்பர்களுக்கு மெயில்ல அனுப்பி இருக்கேன். அத நான் ஃபார்வேட் பண்றேன். கையால எழுதுன பேப்பர்ஸ் கொஞ்சம் இருக்கு. அதையும் கொடுக்குறேன்."

- இப்படிச் சொல்லிவிட்டுக் கண்ணடித்துச் சிரித்தார். சொன்னது போலவே கொடுக்கவும் செய்தார். வாசித்துவிட்டுக் திருப்பிக் கொடுக்கும்போது,

"நூறு பக்கத்துல நாவல் பத்திய பிக்சர் எதுவும் எனக்குப் புடி படல. ஆனா, நாவலுக்கான புனைவு மொழி அருமையா வந்திருக்கு" என்றேன்.

அபொழுதும் ஊதிய சிகரெட்டின் புகையை இழுத்து விட்டவாறே சிரித்தார். சில மாதங்கள் சென்றிருக்கும் "நண்பா... சீக்கிரமா நாவல எழுதி முடிக்கலாம்னு இருக்கேன்." என்று சீனிவாசன் பகிர்ந்தபோது,

"நல்ல விஷயம். நாவல் வெளிவந்தா சொல்லுங்க. நான் அவசியம் படிக்கிறேன்." என்றேன்.

"நீதான் நண்பா டைப்பே பண்ணப் போற... ரெடியா இரு நான் கூப்பிடுறேன்."

"வாய்ஸ் ரெக்கார்ட் பண்ணிக் கொடுங்களேன். நான் டைப் பண்ணி அனுப்பிடறேன்" என்றேன்.

"கூடவே இருந்து டைப் பண்ணனும். அப்போதான் சரிவரும்..." என்றார்.

எப்படியாவது சீனிவாசனைத் தவிர்க்க வேண்டும், இந்த வேலையில் சிக்கிக்கொள்ளக் கூடாது என்றுதான் ஆரம்பத்தில் நினைத்தேன். விதிவசத்தால் எப்படியோ சிக்கிக்கொண்டேன். இதோ இந்த மாதத்துடன் ஒரு வருடம் ஆகப்போகிறது. என்னுடைய தொல்லைகள், சோம்பேறித்தனம், பொறுப்பின்மை, முகநூலின் கலகக் குரல் என்று எதுவுமே சீனிவாசனுக்குப் பிடிக்காது. இதனாலெல்லாம் கூட அவருக்குத் தொல்லைகள் நேர்ந்ததுண்டு.

எது எப்படியோ! இதோ நாவல் எழுதி முடித்தாகிவிட்டது...

"விடம்பனம்" - ஆராய்ந்து அறிய வேண்டிய பெயர்தான்.

வாழ்த்துக்கள் சொல்லுவதும் சடங்காகத்தான் இருக்கும். சென்ற வாரம் சாலையில் எதிர்பட்ட ஒவியர் பாலு என்னுடைய கண்களை உற்றுப் பார்த்துவிட்டு,  மகிழ்ச்சியின் உந்துதலில் என்னைக் கட்டிப் பிடித்து ஆரத் தழுவிக்கொண்டார்.

"நானெல்லாம் கூட இருந்து நாவல் முடிச்சிக் கொடுத்து இருக்கனும்" என்றார் பாலு.

எனக்குத் தெரிந்தே பாப்பாக்கா, பாலு, கோபு என பலருடைய கையெழுத்துப் பிரதியைப் பார்த்து தட்டச்சு செய்திருக்கிறேன். (யாவரும்.காமில் வெளியான) பதடியில் வரும் கதாப்பாத்திரங்களில் யாரேனும் ஒருவரே அந்தந்தப் பகுதிகளைத் தட்டச்சு செய்திருக்கிறார்கள். நம்முடன் நேரிலும், முகநூலிலும் உரையாடும் பல நண்பர்கள் நாவலில் வந்துச் செல்கிறார்கள்.

பிரபு காளிதாஸ், அதிஷா, கிபி-யாகிய நான், ஷபி, கவிஞர் சுகுமாரன், அழகியசிங்கர், சிவா, விநோ, ரமேஷ் ரக்சன், ஜீவ கரிகாலன், வேல்கண்ணன்...

இவர்கள் எல்லோரும் நாவலில் இருப்பார்கள். ஆனால் இருக்க மாட்டார்கள்.

நாவல் எங்கோ ஆரம்பித்து, எங்கோ வந்து முடிந்திருக்கிறது. நாவல் வெளிவருவதில் பலருக்கும் சந்தோஷம் இருக்கும். அவர்களில் நானும் ஒருவன் என்பது மகிழ்ச்சி.

நிறைய எழுதுங்கள் சீனிவாசன்.



காலச்சுவடு பதிப்பகம்
                         
இரு நூல்கள் வெளியீடு

நாள்: 20 ஆகஸ்ட் 2016    
நேரம்: காலை 10 மணி
இடம்:  ஆர்த்ரா ஹால், ஹுசூர் சாலை ( அண்ணாசிலை அருகில் ), கோவை

பாரதி பாடல்கள்  பாடுவோர்  – காந்திமாநகர் அரசுப் பள்ளிச் சிறார்கள்

தலைமை உரை :  க.வை. பழனிசாமி
அறிமுக உரை  :  சுகுமாரன்

                              நூல் வெளியீடு

விடம்பனம் ( நாவல் ) சீனிவாசன் நடராஜன்
வெளியிட்டு உரையாற்றுபவர்  : நாஞ்சில்நாடன்
பெற்றுக்கொண்டு உரையாற்றுபவர்  : அநிருத்தன் வாசுதேவன்

*
நகலிசைக் கலைஞன் ( அனுபவக் குறிப்புகள் ) ஜான் சுந்தர்
வெளியிட்டு உரையாற்றுபவர்  : ஆர். ரவீந்திரன்
பெற்றுக்கொண்டு உரையாற்றுபவர்  : வே. பாபு
*
ஏற்புரை

சீனிவாசன் நடராஜன், ஜான் சுந்தர்

நம்மோடு பேச சீனிவாசனுக்கு நிறையவே இருக்கிறது... அதில் ஒன்றுதான் கோவையில் வெளியாக இருக்கும் விடம்பனமும். கோவை நண்பர்களை சீனிவாசன் சார்பாகவும், காலச்சுவடு நிறுவனத்தின் சார்பாகவும் அன்புடன் அழைக்கிறேன்.

நேரில் சந்திப்போம்.

:-)

Thursday, December 11, 2014

புக் லிஸ்ட் 2014 – ஒரு கண்ணோட்டம்


வாசிக்க விருப்பப்பட்டு ஒவ்வொரு வருடமும் புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள் – தூசு படிய அலமாரியில் தூங்கிக் கொண்டிருப்பது - ஒருவிதக் குற்ற உணர்வை தவறாமல் ஏற்படுத்தும். வேறுவழியும் இல்லை, ஆகச் சோம்பேறியாக இருப்பவர்கள் இதனைக் கடந்து தான் ஆக வேண்டும். எனினும், இந்த ஆண்டு வேண்டிய மட்டும் சில புத்தகங்களை நுனிப்புல் மேய்ந்தது மகிழ்ச்சியான விஷயம். நாவல்களும் தன்வரலாற்றுப் புத்தகங்களுமே இவ்வருடம் எனது தேர்வாக இருந்தது. ஒருசில கட்டுரைத் தொகுப்புகளையும் படிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். நல்லதொரு மழைநாளில், இரவு நேரப் பயணத்தில் எதிர்பாராத விதமாக சிறியதொரு விபத்து ஏற்பட்டது. விபத்து என்னவோ மிகச் சிறியது. கண்களுக்குக் கீழுள்ள பகுதியில் பாதிப்பு ஏற்பட்டதால், இரண்டு மாதங்களுக்குப் பூரண ஓய்வில் இருக்கும்படி பரிசோதித்த மருத்துவர் கேட்டுக் கொண்டார். 

இரண்டு மாதங்கள் ஓய்வில் இருப்பதென்பது என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத ஒன்று. மருத்துவரிடம் இரண்டு கேள்விகளை முன் வைத்தேன்:

“டாக்டர்... நான் காலையும் மாலையும் ரெண்டு மணிநேரம் வாக்கிங் போகலாமா?”

“ஓ... தாராளமா போங்க...”

“டாக்டர்... ஒரு சின்ன கமிட்மென்ட்ல மாட்டிக்கிட்டேன். நான் புக்ஸ் படிக்கலாமா?”

“கொஞ்சம் போல படிக்கிறதுல பிரச்சனை ஒன்னும் இல்ல... ரொம்ப ஸ்ட்ரெய்ன் பண்ணிக்காதீங்க...” என்றார்.

புத்தகங்களை முகத்திற்கு நேரே வைத்துக் கொண்டு படிக்காமல், தலைக்கு மேலே தூக்கிப்பிடித்தவாறு - ஒரு விநோதக் கோணத்தில் வைத்துக்கொண்டு படிக்குமாறு மருத்துவர் அறிவுறுத்தினார். நானும் முயற்சி செய்து பார்த்தேன். கழுத்து வலி வந்ததுதான் மிச்சம். கருவிழியை மேல்நோக்கி வைத்துப் படித்ததால் கண்ணிலும் வலி ஏற்பட்டது. இப்பொழுது ஓரளவிற்குப் பரவாயில்லை. முகத்திற்கு நேரே புத்தகத்தை வைத்துக்கொண்டு படிப்பதற்குத் தயாராகிவிட்டேன்.

இரண்டு மாத ஓய்வு கற்பித்துச் சென்ற அனுபவ பாடம் அளப்பரியது. நண்பனும், அரசுப் பள்ளி ஆசிரியனுமான சரவணனுடன் காலையும் மாலையும் நடை சென்றது மட்டுமே மனதிற்குப் புத்துணர்ச்சி தரக்கூடியதாக அமைந்த நேரங்கள். கண் பரிசோதனை மேற்கொண்ட இடத்தில் ஒரு சின்ன அனுபவம். என்னருகில் சினிமாக் கதாநாயகன் போல, மூக்கும் முழியுமாக ஒரு வடஇந்திய நண்பர் உட்கார்ந்திருந்தார். நண்பருக்கு முன்னால் மருத்துவரைப் பார்க்க எனக்கு தான் அனுமதி இருந்தது. இருக்கையின் நுனியில் பொறுமையில்லாமல் அவர் உட்கார்ந்திருந்தார். வெளிப்படுத்த முடியாத தவிப்பில் வேறு இருந்தார். அவரிடம் கேட்டேன்:

“Actually what’s your problem?”

நண்பருக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்றாலும் கேட்ட கேள்வியின் அர்த்தம் அவருக்குப் புரிந்தது. பிரச்சனை இதுதான். நண்பர் நகைகளைச் செய்யக்கூடிய பொற்கொல்லர். மகாராஷ்டிரம் சொந்த மாநிலம். விபத்தொன்றில் அவரது முன் நெற்றியில் அடிபடவும், கண்களுக்குச் செல்லும் முக்கிய நரம்பொன்று பாதிப்படைந்து பார்வைக்குத் தெரியும் காட்சிகள் யாவும் இரண்டிரண்டாகத் தெரிகின்றன. இயல்பான பார்வை தனக்குத் திரும்புமா என்பது தான் அவரது கவலை.

“You don’t worry friend. I also met with an accident and have some vision probs. We have an advanced technology to cure any type of vision problem. நீங்க என்ன நம்பனும்” என்று அவரிடம் கூறியதெல்லாம் ஒன்றும் எடுபடவில்லை, வெற்று வார்த்தைகளாகின. “சரி... நீங்க இவ்வளோ பதட்டத்தோட இருக்கீங்கன்னா... எனக்கு முன்னால நீங்க டாக்டர பாருங்க” என்று முன்னிருக்கையில் நண்பரை அமர வைத்தேன். ஆரம்பத்தில் சங்கடப் பட்டு முன்னே செல்ல மறுத்தவர், வாய்ப்பின் முக்கியத்துவம் கருதி மிகவும் மகிழ்ந்தார். அமர வைத்த சில நிமிடங்களில் நண்பரை உள்ளே அழைத்தார்கள். இருபது நிமிடங்களுக்கு மேலாக நானும் நண்பருக்காகக் காத்திருந்தேன். வெளியில் வந்தவர் புன்னகை சிந்தி, கை குளுக்கிவிட்டு மகிழ்ச்சியுடன் கடந்து சென்றார். மருத்துவர் ஒன்றும் எல்லாம் வல்ல கடவுள் இல்லையே! நண்பருடைய பிரச்னையை முழுதாகத் தீர்த்துவைப்பாரா என்றும் சொல்லுவதற்கில்லையே!. பிரச்னையை சமாளிக்க சிறப்புக் கண்ணாடியை மருத்துவர் வழங்கலாம். எனினும் கண்ணாடியைக் கழட்டினால் நண்பருக்கு உலகமே டபுள் டபுளாகத் தெரியும். ஒரு பொற்கொல்லருக்குப் பார்வை என்பது எவ்வளவு முக்கியம் என்பதை உங்களுக்கு சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லையே. தற்காலிகப் பார்வையை பொற்கொல்லருக்கு மருத்துவர் வழங்கி இருக்கிறார். ஒவ்வொரு தனி மனிதருமே இதுபோன்ற சிக்கல்களுக்கு உள்ளாகி நெருக்குதல்களை சமாளித்துத் தான் முன்னேற வேண்டியுள்ளது.

பார்முலா 1 கார் பந்தைய வீரர் ஷூமாக்கரை உலகமே ஈர்ப்புடன் கவனித்து வந்தது. கார் ஓட்டியவர் பனிச் சருக்கில் ஈடுபட வேண்டிய அவசியம் தான் என்ன? பனிச்சருக்கில் ஈடுபட்ட ஷூமாக்கருக்கு விபத்து நேர்ந்து பல நாட்கள் கோமாவில் இருந்தார். பதினாருபேர் அடங்கிய மருத்துவக்குழு அவரை இராத்திரிப் பகலாகக் கண்காணித்து கோமாவில் இருந்து மீட்டனர். இன்றைய தேதியில் கழுத்துக்குக் கீழுள்ள அவரது உடல்பாகங்கள் செயல்படாது. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். உலகின் அதிவேக மனிதர் இனி ஆமை வேகத்தில் இயங்க வேண்டிய சூழல். ஒருவருடைய உதவியில்லாமல் ஷூமாக்கர் இனி எங்கும் செல்ல இயலாது என்கிறார்கள். ஷூமாக்கரின் இந்தச் செயலிழந்த நிலையையும் உலகமே கவனிக்கிறது. இங்கு பொற்கொல்லனை கவனிப்பார் உளரோ!? பொற்கொல்லனைப் போன்றவர்களை கவனிப்பாரும் உளரோ!?

வெற்றியாளர்கள் போலவே சராசரி மனிதர்களின் வாழ்க்கையும் சாதனைகள் நிரம்பியவை. அதற்கு உதாரணமாகத் தான் மலையாளத்தில் வெளிவரும் தன்வரலாறுகள் யாவும் நம்மைப் புருவம் உயர்த்த வைக்கின்றன. திருடன், பாலியல் தொழிலாளி, கன்னியாஸ்திரி, போலீஸ் கான்ஸ்டபிள், பெண் காவலர் தொடங்கி – பல்லான படத்தில் நடித்த ஷகிலா வரையும், ஷகிலாவிற்கு டூப் போட்ட துணை நடிகை வரையும் மலையாளத்தில் வெளிவரும் தன்வரலாறுகள் சக்கைபோடு போடுகின்றன. சராசரி மக்களின் வாழ்க்கை அனுபவங்கள் யாவும் புத்தகமாக அச்சாகின்றன. அதில் சில புத்தகங்கள் ஜனரஞ்சக இதழ்களில் தொடராக வெளிவந்த பதிவுகள். உலகின் உன்னதமான உச்சப் புனைவுகளையும் தூக்கிச் சாப்பிடக் கூடிய நிஜக் கதைகள் தாம் இவை.

நம்மூரில் இன்னும் கூட ஆரூர் தாஸ், இளையராஜா, பாகவதர் கொலைவழக்கு போன்றவற்றையே கட்டிக்கொண்டு அழுகிறோம். (பார்க்க தினத்தந்தி) இதெல்லாம் கூட தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் தாம் என்பதை மறுப்பதற்கில்லை. வெற்றியாளர்களின் சாகசப் பிரகடனங்களை விட, பிரபலங்களின் வாழ்வியல் வீழ்ச்சியை விட, சக எளிய மனிதர்களின் வாழ்வியல் நெருக்குதல்களைத் தாங்கிச் செல்லும் சராசரி அனுபவங்கள் நம்மைச் சில்லிட வைக்கின்றன. அந்த வகையில் கீழ்கண்ட புத்தகங்கள் யாவும், அதனதன் தன்மையில் தனித்துவம் வாய்ந்தவை. “நாவல், கவிதை, சிறுகதை” சார்ந்து நிறைய வாசகக் கூட்டங்கள் ஏற்பாடாகிறது. தன்வரலாறு படிப்பவர்கள் எண்ணிக்கையில் அதிகம். அது போன்றவர்கள் கூடிக் குலாவும் வாசகக் கூட்டங்கள் நடப்பதில்லை என்பது வருத்தமே. நான் படித்த சுவாரஸ்யமான தன்வரலாறுகளில் சில:

1. அப்பாவின் துப்பாக்கி – ஹெனர் சலீம் (காலச்சுவடு)
2. பீமாயணம் – ஆனந்த் & குழுவினர் (காலச்சுவடு)
3. பச்சைவிரல் – வில்சன் ஐசக் (காலச்சுவடு)
4. திருடன் மணியன்பிள்ளை – ஜி. ஆர். இந்துகோபன் (காலச்சுவடு)
5. தேவதாசியும் மகானும் – வெங்கடகிருஷ்ணன் ஸ்ரீராம் (காலச்சுவடு)
6. நளினி ஜமீலா – குளச்சல் மு யூசுப் (காலச்சுவடு)
7. தந்தையின் நினைவுக்குறிப்புகள் – குளச்சல் மு யூசுப் (காலச்சுவடு)
8. போரும் அமைதியும் – பத்திநாதன் (காலச்சுவடு)
9. நிழல் வீரர்கள் – ராம் (மதுரை ப்ரஸ், (காலச்சுவடு))
10. தாத்ரிக்குட்டியின் ஸ்மார்த்த விசாரம் – லீலாகிருஷ்ணன் (தமிழினி)
11. எனது நினைவுகள் – போபடி R ஹீரானந்தாணி (சாகித்ய அகாடமி)
12. நினைவலைகள் – பால் தாமஸ் (நெய்தல் வெளியீடு)
13. நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி – மக்கள் கண்காணிப்பகம்
14. ஸ்டீவ் ஜாப்ஸ் – அப்பு (மதி நிலையம்)
15. நட்சத்திரக் கணித மேதைகள் – பை கணித மன்றம்
16. சிதம்பர ரகசியம் – பாலச்சந்திரன் சுள்ளிக்காடு (வம்சி)
17. ஆமென் – சிஸ்டர் ஜெஸ்மி (காலச்சுவடு)

காலச்சுவடில் வெளிவந்த கட்டுரைகள் & ஆய்வுக் கட்டுரைத் தொகுப்புகளை வாசிக்க வேண்டிய சூழல் அமைந்தது. பனுவல் புத்தக அங்காடி ஏற்பாடு செய்திருந்த “சமூக நீதி” நிகழ்வுக்காக வேண்டியும் சில கட்டுரைத் தொகுப்புகளைப் படிக்க நேர்ந்தது. வேறுசில பணிகள் இருந்ததால் பனுவலின் “சமூகநீதி” நிகழ்வில் முழுதாகப் பங்கேற்க முடியவில்லை என்பது வருத்தமே. கம்ப்யூட்டர் சார்ந்த புத்தகங்கள் பரிதிக்காக வாங்கியவை. ஆகவே அவற்றையும் ஒருமுறை படித்துவிட்டு பரிதிக்கு அனுப்பினேன். அந்த வகையில் சில புத்தகங்கள்:

1. வியத்தலும் இலமே – அ. முத்துலிங்கம் (காலச்சுவடு)
2. தமிழ்ச் சிறுகதைகள் பிறக்கிறது – சி. சு. செல்லப்பா (காலச்சுவடு)
3. பதிப்புகள் மறுபதிபுகள் – பெருமாள்முருகன் (காலச்சுவடு)
4. கெட்ட வார்த்தை பேசுவோம் – பெருமாள் முருகன் (காலச்சுவடு)
5. சாதியும் நானும் - பெருமாள் முருகன் (காலச்சுவடு)
6. பண்பாட்டு அசைவுகள் – தொ. பரமசிவம் (காலச்சுவடு)
7. தமிழர் உணவு – பக்தவத்சல பாரதி (காலச்சுவடு)
8. சேரன்மாதேவி குருகுலப் போராட்டம் – பழ. அதியமான் (காலச்சுவடு)
9. பசுமைப் புரட்சியின் கதை – சங்கீதா ஸ்ரீராம் (காலச்சுவடு)
10. சகாயம் செய்த சகாயம் – மலைகள் பதிப்பகம்
11. வாளோர் ஆடும் அமலை – தடாகம்
12. தமிழகத்தின் இரவாடிகள் – தடாகம்
13. நறுமணப் பொருட்கள் – கு. சிவராமன் (பூவுலகின் நண்பர்கள்)
14. ஜாதியற்றவளின் குரல் – ஜெயராணி (கறுப்புப் பிரதிகள்)
15. நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள் – விகடன் பிரசுரம்
16. கூகுள் தேடு – கிழக்கு பதிப்பகம்
17. ஃபேஸ் புக் – கிழக்கு பதிப்பகம்
18. கூகுள் – கிழக்கு பதிப்பகம்
19. ஒப்பன் சோர்ஸ் – கிழக்கு பதிப்பகம்
20. விழுந்த கம்பெனி எழுந்த வரலாறு – கலைஞன் பதிப்பகம்
21. ட்விட்டார் – கிழக்கு பதிப்பகம்

நாவல்கள் வாசிப்பதைப் பெரிதும் விரும்புவேன். சில நாவல்களை மறுபடியும் மறுபடியும் கூட வாசிப்பேன். முன்பெல்லாம், “உலக இலக்கிய வரிசை, குழந்தைகள் இலக்கிய வரிசை” என்று சில புத்தகங்களைக் கொண்டு வருவார்கள். தற்கால தமிழ்ப் பதிப்பக சூழலில், இந்த “கிளாசிக் வரிசை” என்ற வார்த்தை படுகிற பாடு இருகிறதே...! அதைச் சொல்லி மாளவில்லை. நண்பர் காலச்சுவடு கண்ணனிடம் ஒருமுறை எரிச்சலுடன் கேட்டேன்:

“ஏங்கே... புத்தகத்தை வெளியிடுறீங்க சரி? அதென்னங்க கிளாசிக் சிறுகதை, கிளாசிக் நாவல், கிளாசிக் உலக வரிசை, கிளாசிக் கவிதைன்னு ஒரு டேக் வேண்டிக் கெடக்குது?”

“நீங்க என்ன சும்மா போகிற போக்குல விளையாட்டா சொல்லிட்டிங்க! படைப்பிலகியத்தில் ஆளுமை செலுத்தும் பத்து பேருக்கு அழைப்பு விடுத்து, அவர்களை ஓரிடத்தில் ஒருவார காலம் தங்க வைத்து, நல்ல சில புத்தகங்களைத் தேர்வு செய்யச் சொல்லி, அதில் கிளாசிக்கான நாவல்களை மட்டுமே தேர்ந்தெடுத்து காலச்சுவடு பதிப்பகம் ‘கிளாசிக் வரிசை’யைக் கொண்டு வருகிறது. எல்லா புத்தகங்களுக்கும் காலச்சுவடு அப்படி ‘கிளாசிக் டேக்’ கொடுக்கறது இல்லியே...! நண்பர்கள் குழுவாக உட்கார்ந்து விவாதிக்கிறாங்க. அறிமுக வாசகர்களின் புத்தகத் தெரிவுக்காக இந்த மெனக்கெடல் தேவைப்படுது.” என்று பதில் கூறினார்.

“ஓஹோ... சிறுகதையாகட்டும், நவலாகட்டும், கவிதையாகட்டும், மொழிபெயர்ப்பாகட்டும் - இந்த கிளாசிக் என்ற வார்த்தைக்குப் பின்னால் இவ்வளோ மெனக்கெடல்கள் இருக்கிறதா?” என்று நினைத்துக் கொண்டேன். ஆகவே, தமிழின் கிளாசிக் நாவல்களாகக் கருதப்படும் சில நாவல்களை இந்த வருடத்தில் ஒரு ஓட்டு ஓட்டினேன். அந்த வகையில் கிளாசிக் லேபிள் ஓட்டப்பட்ட மற்றும் ஓட்டப்படாத நாவல்களில் ஒருசில கீழே...

1. மாதொருபாகன் – பெருமாள்முருகன் (காலச்சுவடு)
2. பூக்குழி – பெருமாள்முருகன் (காலச்சுவடு)
3. சாய்வு நாற்காலி – தோப்பில் முகமது மீரான் (காலச்சுவடு)
4. தலைகீழ் விகிதங்கள் – நாஞ்சில் நாடன் (காலச்சுவடு)
5. தலைமுறைகள் – நீல. பத்மநாபன் (காலச்சுவடு)
6. கோபல்ல கிராமம் – கி.ரா (காலச்சுவடு)
7. பனி – ஓரான் பாமுக் (காலச்சுவடு)
8. நெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன் (தமிழினி பதிப்பகம்)
9. ரத்த உறவு – யூமா வாசுகி (தமிழினி)
10. மீஸான் கற்கள் – புனத்தில் குஞ்சப்துல்லா (காலச்சுவடு)
11. நிழல் முற்றம் – பெருமாள்முருகன் (காலச்சுவடு)
12. அஞ்சலை – கண்மணி குணசேகரன் (அருள் புத்தக நிலையம்)
13. ஆளண்ட பட்சி – பெருமாள்முருகன் (காலச்சுவடு)
14. வெல்லிங்டன் – கவிஞர் சுகுமாரன் (காலச்சுவடு)
15. அம்மா வந்தாள் – தி. ஜானகிராமன் (காலச்சுவடு)
16. பசித்த மானுடம் – கரிச்சான் குஞ்சு (காலச்சுவடு)
17. வாடிவாசல் – சி. சு. செல்லப்பா (காலச்சுவடு)
18. மானசரோவர் – அசோகமித்திரன் (கிழக்கு பதிப்பகம்)
19. ஆகாயத் தாமரை – அசோகமித்திரன் (கிழக்கு பதிப்பகம்)
20. உம்மத் – ஸர்மிளா சையத் (காலச்சுவடு)
21. மஸ்ஷர் பெருவெளி – புனத்தில் குஞ்சப்துல்லா (காலச்சுவடு)
22. நிழலின் தனிமை – தேவிபாரதி (காலச்சுவடு)
23. 18-வது அச்சக்கோடு – அசோகமித்திரன் (காலச்சுவடு)
24. அவஸ்தை – யு. ஆர். ஆனந்த மூர்த்தி (காலச்சுவடு)
25. சிவப்புத் தகரக் கூரை – நிர்மல் வர்மா (காலச்சுவடு)
26. கீதாரி – சு. தமிழ்ச்செல்வி (NCBH)
27. மீன்குகைவாசிகள் – கீரனூர் ஜகீர்ராஜா (ஆழி பதிப்பகம்)
28. தனிமையின் நூறுஆண்டுகள் – காப்ரியேல் கார்சியா மார்க்கோஸ்
29. அஜ்னபி – மீரான் மைதீன் (காலச்சுவடு)
30. ஆத்துக்குப் போகணும் – காவேரி (காலச்சுவடு)
31. தேவதாஸ் – சரத் சந்திர சட்டோபாத்யாயா (காலச்சுவடு)
32. குற்றவிசாரணை – லெ – கிளேஸியோ (காலச்சுவடு)
33. பாதையில் பதிந்த அடிகள் – ராஜம் கிருஷ்ணன் (காலச்சுவடு)
34. குதிரை வேட்டை – பெர் பெதர்சன் (காலச்சுவடு)
35. செம்பருத்தி – தி. ஜானகிராமன் (காலச்சுவடு)
36. ஓதி எறியப்பட்ட முட்டை – மீரான் மைதீன் (காலச்சுவடு)
37. என் பெயர் ராமசேஷன் – ஆதவன் (உயிர்மை)
38. காகிதமலர்கள் – ஆதவன் (உயிர்மை)
39. மஞ்சள் வெயில் – யூமா வாசுகி
40. விஷ்ணுபுரம் – ஜெயமோகன் (கவிதா பதிப்பகம்)
41. கள்ளிக்காட்டு இதிகாசம் – வைரமுத்து (திருமகள் நிலையம்)
42. கனக துர்கா – பாஸ்கர் சக்தி (வம்சி பதிப்பகம்)
43. வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு - ரேமன்ட் கார்வார்
44. நினைவுதிர் காலம் – யுவன் சந்திரசேகர் (காலச்சுவடு)
45. பயணக் கதை – யுவன் சந்திரசேகர்
46. பெரியார் ரசிகன் – குகன் (உதயக்கண்ணன் பதிப்பகம்)

நாடகம்:

1. சீதை ஜோசியம் – சாகித்ய அகாடமி
“இந்தப் புத்தகங்களை எல்லாம், இந்த ஒரு வருட காலத்தில் நுனிப் புல் மேய்ந்திருக்கிறேன்” என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. இவற்றிலுள்ள பல புத்தகங்கள் வாசகப் பிரியர்கள் அவசியம் படித்து மகிழவேண்டிய புத்தகங்கள் கூட.

கவிஞர் சுகுமாரனைச் சந்தித்தபோது பஷீரின் புத்தகமொன்றை மொழிபெயர்த்துக் கொண்டிருப்பதாகக் கூறினார். ஜி. குப்புசாமி ஓரான் பாமுக்கின் இஸ்தான்புலை மொழியாக்கம் செய்துகொண்டிருக்கிறார். பாஸ்கர் சக்தியின் சிறுகதைகளும் மறுவெளியீடு காண இருக்கின்றன. நான்கு வருடங்களாக - ஒரு தமிழ் கிளாசிக் எழுத்தாளரின் சாகித்ய அகாடமி விருதுபெற்ற நாவலொன்று மறுவெளியீட்டில் அச்சாகாதா? என்று காத்துக் கொண்டிருக்கிறேன். ஜனவரி புத்தக சந்தைக்கு அந்த நாவலும் மறுவெளியீடு காண இருக்கிறது. போதாக் குறைக்கு பெருமாள்முருகன் சில நாட்களுக்கு முன்னர் செல்பேசியில் அழைத்திருந்தார்.

“பிரபு... எங்கிட்டு இருக்கீங்க?” என்றார் முருகன்.

“ஆங்... எங்க மாமியார் ஊட்டுல கறி சோறு திங்கறேன்... அதுவா முக்கியம்... எதுக்கு என்ன டிஸ்டர்ப் பண்றீங்க... நான் ரொம்ப பிசி... இன்னா விஷயங்க ஜீனியஸ்... மேட்டருக்கு வாங்க...!” என்றேன்.

“கறி சோறு நல்லா இருக்குதா...?” என்று கேட்டுவிட்டு “நான் இங்குட்டு ரெண்டு நாவல் எழுதி இருக்கேன்... ரெண்டும் ஒரே நாவல்...” என்றார்.

ஒரு முறை என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். கிள்ளிய இடம் வலித்தது. அப்படியெனில், நான் பிரக்ஞையுடன் தான் இருக்கிறேன். எதிர் முனையில் பேசியவர் மூளைச் சூட்டில் இருக்கிறாரோ? பரிசோதித்து விட வேண்டியதுதான். முருகனிடம் கேட்டேன்:

“உங்களுக்கு மூள கீள கலங்கிடலையே...! நீங்க நெலமையில தான் இருக்கீங்களா ஜீனியஸ்...!” என்றேன்.

“ஏன்யா... கறி சோறு நல்லா இருக்குதான்னு கேட்டது ஒரு குத்தமாயா?” என்றார்.

“விளையாடாதீங்க ஜீனியஸ்... ரெண்டு நாவல் எழுதுறீங்க சரி...! அதெப்படி ரெண்டு நாவல்களும் ஒரே நாவலாக இருக்க முடியும்? It’s impossible.” என்றேன்.

“அங்கிட்டு தான் இருக்குது ட்விஸ்ட் & சஸ்பென்ஸ்... ரெண்டு வேறவேற முன்னட்டை, ரெண்டு வேறவேற தலைப்பு... ரெண்டு வேறவேற பின்னட்டை, ரெண்டு பின்னட்டையிலும் கெத்து காமிக்கிற மாதிரி என்னோட அச்சு அசலான புகைப்படம். ஆனா, ஒரே நாவல்... அதத் தெரிஞ்சிக்க ஜனவரி மாசம் வரைக்கும் நீங்க பொறுமையா இருக்கணும்...” என்றார் பெருமாள்முருகன்.

மிசஸ் பெருமாள்முருகனுக்கு செல்பேசியில் அழைப்பு விடுத்தேன். “ஏம்மா டீச்சரம்மா... உங்க வீட்டுக்காரரு ரெண்டு நாவல் எழுதி இருக்கராராமா... ரெண்டு நாவலும் ஒரே நாவலாமா! ஊர் உலகம் நம்புமா? எனக்கு ஃபோன் போட்ட மாதிரி காலச்சுவடு கண்ணனுக்கு ஃபோன் போட்டுடப் போறாரு! கத வேற மாதிரி போயிடும்... உங்க ஊட்டுக்காரற கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணுங்க... ஒண்ணு சொல்றேன் பொறுமையா கேக்குறீங்களா?” என்றேன்.

“ஹூம்... சொல்லுங்க...” என்றார் குயுக்தியுடன் மிசஸ் பெருமாள்முருகன்.

“முடிஞ்சா நெல்லிக்கா சைஸ்ல ஒரு பழுத்த எலுமிச்சம் பழத்த எடுத்து, முருகனோட உச்சந் தலையில வச்சி, ஓங்கி ஒரு அடி அடிச்சி, போர்டில் டஸ்டர வச்சி பூமாதிரி எழுதுனத அழிப்பீங்களே... அந்த மாதிரி எலுமிச்சைய தேய்ச்சி உட்டு தலைக்கு ஊத்துங்கோ...” என்றேன்.

“அடக் கூறு கெட்ட கிறுக்குப் பயலே...! அவர் சொல்றது நூத்துக்கு நூறு நெஜம் தான். நீதான் கொழம்பி இருக்குற... உன் தலையில திருஷ்டி பூசணிக்காயை உடைக்க” என்றார் மிசஸ் பெருமாள்முருகன்.

“அதெப்படிங்க அக்கா... ரெண்டு நாவல் எழுதி இருக்காராம்... ஆனா ஒரே நாவல்’னும் சொல்றாரு. நம்ப முடியலையே...” என்றேன்.

“நீ ரொம்ப யோசிக்கிற பிரபு. சிம்பிள் லாஜிக்ல யோசிச்சிப் பாரு. நீ ஈசியா கண்டு புடிச்சிடலாம்.” என்றார் மிசஸ் பெருமாள்முருகன்.

“க்கும்... அந்த அளவுக்கு லாஜிக்கலா யோசிக்கிற மூளை இருந்தா கம்ப்யூட்டர் கம்பெனியில என்ஜினியரா இல்ல இருந்திருப்பேன். நீங்களே சொல்லிடுங்களேன் அக்கா...” என்றேன்.

“வாய்ப்பே இல்ல... ஜனவரி மாசம் ரெண்டு புக்கையும் வெளியிடுவாங்க... அது வரைக்கும் நீ வெயிட் பண்ணு” என்றார்கள்.

யாருகிட்ட வேலையக் காமிக்கிறாங்க இவங்க ரெண்டு பேரும். கண்டு புடிச்சோமுள்ள... ‘மாதொருபாகன்’ படித்த வாசகர்களுக்குக் “காளி என்ன ஆனான்?” என்பது மில்லியன் டாலர் கேள்வி.

காளி தற்கொலை செய்துகொண்டு இறந்தானா? உயிருடன் இருக்கிறானா?

“காளி இறந்தால் என்ன ஆகும்?” என்பது ஒரு நாவலாகவும், “காளி உயிருடன் இருந்தால் என்ன ஆகும்?” என்பது இன்னொரு நாவலாகவும் இரண்டு பகுதிகளாக விரிகிறது. ஆக, மாதொருபாகனின் முதல் பாகத்தை ஒட்டிய இரண்டு முடிவுகளை நோக்கி - இரண்டு வெவ்வேறு நாவல்கள் விரிகின்றன. ஜனவரியை ஒட்டி இந்த இரண்டு நாவல்களும் வெளியாக இருக்கின்றன. (இந்த மாத இந்தியா டுடேவில் (தமிழ்) நாவலின் ஒரு அத்தியாயம் வெளியாகியுள்ளது. படித்துப் பார்க்கவும்.) இதுபோன்ற படைப்பிலக்கிய முயற்சிகள் “மாதொருபாகன்” நாவலுக்கு முன்பு நிகழ்ந்துள்ளதா? என்று தெரியவில்லை. அப்படி ஏதேனும் ஒரு முயற்சி உலக இலக்கியங்களில் நடந்திருந்தால் சொல்லுங்கள் பார்ப்போம். நாம் மேலதிகமாக உரையாடலாம். அது சினிமாவாகக் கூட இருக்கலாம். இருந்தால் சொல்லுங்கள் நாம் பேசி உரையாடலாம்.

இப்போதைக்கு எனக்குக் கொஞ்சம் போல வேலை இருக்கிறது. இந்த (டிசம்பர்) மாதத்தின் இறுதிக்குள் படிக்கவேண்டிய புத்தகங்கள் சில பாக்கி இருக்கின்றன. அவற்றினை நான் படித்து முடிக்க வேண்டும். அவற்றில் சில:

1. புலியின் நிழலில் – நாம்தேவ் நிம்கடே
2. ஆடு ஜீவிதம் – பென்யாமின்
3. பன்கர்வாடி - வெங்கடேஷ் மாட்கூல்கர்
4. ஒரு சூத்திரனின் கதை – ஏ. என். சட்டநாதன்
5. விடியலை நோக்கி – பேபி ஹால்தார்
6. லதிஃபே ஹனிம் – இபெக் சாலிஷ்லர்
7. நடந்தாய் வாழி காவேரி – சிட்டி – தி. ஜானகிராமன்
8. என் இளமைக் காலம் – தஸ்லீமா நஸ் ரீன்

Wednesday, September 3, 2014

பத்து புத்தகங்கள்

1. தொல்காப்பியம் (தெளிவுரையுடனும் விளக்க உரையுடனும்)
2. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி
3. கெட்ட வார்த்தை பேசுவோம் – பெருமாள்முருகன்
4. பஷீரின் படைப்புகள் (நாவல்கள், சிறுகதைகள்)
5. பெருமாள்முருகனின் நாவல்கள் (கூள மாதாரி, நிழல்முற்றம், மாதொருபாகன்)
6. அங்கே இப்போ என்ன நேரம்? – அ. முத்துலிங்கம்
7. மகாபாரத நவீனப் படைப்புகள் (இரண்டாம் இடம், பருவம், சாம்பன்)
8. மீஸான் கற்கள் – புனத்தில் குஞ்சப்துல்லா
9. ராஜ் கௌதமனின் புனைவுகள் (தன்வரலாற்று நாவல்கள்)
10. சிறுகதைகள் – திலீப்குமார், ச. தமிழ்ச்செல்வன்
11. வெட்டுப்புலி – தமிழ்மகன்

முன்னால் முதல்வர் கருணாநிதி தொல்காப்பியத்தைப் பற்றி “தொல்காப்பியப் பூங்கா” என்றொரு புத்தகம் எழுதினாராம். முத்தமிழ் அறிஞர் கருணாநிதியின் அந்தப் புத்தகத்தைப் பற்றி சிங்கப்பூரில் வாழும் தமிழ் ஆர்வலர் ஒருவர், கருணாநிதி எழுதியிருந்தப் புத்தகத்தைக் காட்டிலும் அதிக பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகத்தை வெளியிட்டாராம். புத்தகத்தின் தலைப்பு: “தொல்காப்பியப் பூங்காவில் களையெடுப்பு”. அப்படின்னா கலைஞர் எழுதியிருந்த புத்தகத்தில் எவ்வளவு பிழைகள் இருந்திருக்கும் பாருங்கள்.(பல ஆண்டுகளுக்கு முன்பு துக்ளக்கில் படித்தது)

தொல்காப்பியம் லேசுப்பட்ட விஷயம் அல்ல என்பதற்கு மேற்சொன்ன விஷயங்கள் உதாரணம். தொல்காப்பியத்தைப் புரட்டுவது சங்க இலக்கியத்தை அணுகுவதற்கு உதவியாக இருக்கும். அது சரி... “சங்க இலக்கியங்களை எதற்காகப் படிக்க வேண்டும் என்கிறீர்களா?”. நல்ல கேள்விதான்.

“கெட்ட வார்த்தை பேசுவோம்” படித்தால், “ஆஹா... இவ்வளோ மேட்டர் இந்த சங்க இலக்கியத்தில் இருக்கிறதா?” என்று புருவத்தை உயர்த்துவீர்கள்.

தமிழர்கள் அனைவரும், தமிழில் ஆர்வமுள்ள அனைவரும் வாழ்நாளில் ஒருமுறையேனும் அவசியம் புரட்ட வேண்டிய தெளிவுரைகளைக் கொண்ட தொல்காப்பியப் பதிப்புகள் நிறையவே சந்தைகளில் கிடைக்கின்றன. எழுத்தாளர் சுஜாதா கூட தொல்காப்பியம் சார்ந்து, அவரே எழுதி ஒரு புத்தகம் வெளியிட்டிருக்கிறார் என்றே நினைக்கிறன். கருணாநிதி அவர்களும், சுஜாதா அவர்களும் விரும்பிப் படித்த, எழுதிய புத்தகத்தை நாம் படிக்காமல் விடலாமா?

சங்க இலக்கியத்தைத் தொகுத்ததில் நிறைய குளறுபடிகள் உள்ளதாக அறிஞர்களும் ஆய்வாளர்களும் கூறுகிறார்கள். பெருமாள்முருகனின் “பதிப்புகள் மறுபதிப்புகள்” புத்தகத்தில் இந்த சங்ககாலக் குளறுபடிகள் முதல் தற்காலப் பதிப்புகளில் காணக் கிடைக்கும் குளறுபடிகள் வரை சிலவற்றைச் சுட்டிக்காட்டிக் கடுமையான விமசனங்களை முன் வைத்திருக்கிறார். போகட்டும்... அகராதி எப்போதுமே நம்மிடம் இருப்பது நல்லது. நம் வீடுகளில் தமிழ் அகராதி இருந்தால் தானே – வீட்டிலுள்ளக் குழந்தைகள் தமிழ் மொழியையும் ஆங்கிலம் போலவே ஆர்வத்துடன் அணுகுவார்கள். (தமிழ் தமிழ்னு உருகுற முக்கால் வாசிப் பயலுங்க வீட்டுல அகராதி இருக்குதான்னு கேளுங்க... உங்களைப் பார்த்துச் சிரிப்பார்கள்... அப்படிச் சிலர் என்னைப் பார்த்துச் சிரித்ததுண்டு...)

அடுத்தது, இந்திய எழுத்தாளர்களில் பேப்பூர் சுல்தான் என்று செல்லமாகவும் மரியாதையாகவும் அழைக்கப்படும் முடிசூடா மன்னன் வைக்கம் முகமது பஷீர். கேணியில் நாடக நடிகர் ரோஹிணி கலந்துகொண்டபோது – அவர் இயக்கத்தில் வெளிவர இருக்கும் “அப்பாவின் மீசை” திரைப்படம் சமந்தமாக ஒருவிஷயத்தைக் கூறினார்:

“என்னோட படத்துல டீன் ஏஜ் பசங்க நடிகிறதால ஸ்கிரிப்ட் பத்தியும், ஸ்க்ரீன் ப்ளே பத்தியும் பசங்களுக்கு ஒரு புரிதல் வரணும்னு - ஒரு வொர்க் ஷாப் கண்டக்ட் பண்ணோம். கதைகளை வாசிச்சிப் புரிஞ்சிக்கிறதும் வொர்க் ஷாப்பின் ஒரு பகுதியாக இருந்தது. அதுக்கு பஷீரின் கதைகளை தான் நாங்க பசங்களுக்குக் கொடுத்து வாசிக்க வச்சோம்.”

சினிமாவுல சூப்பர் ஸ்டாருங்கன்னா, புத்தக வாசிப்புல பேப்பூர் சுல்தான் பஷீர் தான் தன்னிகரில்லாத ஐக்கான். குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை விரும்பக்கூடிய படைப்பாளி. எல்லா மொழிகளிலும் இவருக்கு ரசிகர்கள் உண்டு. (தமிழில் குளச்சல் மு யூசுப்பின் மொழிபெயர்ப்பு உகந்தது.)

இதுவரைக்கும் பெருமாள்முருகன் 7 நாவல்களை எழுதியிருக்கிறார். இவரது மூன்று நாவல்கள் (கூள மாதாரி, நிழல்முற்றம், மாதொருபாகன்) ஆங்கிலத்தில் மொழியாகப் பட்டுள்ளன. இன்னும் இரண்டு நாவல்கள் மொழியாக்கம் செய்யப்பட்டுக் கொண்டிருகின்றன. பெருமாள்முருகனைப் பற்றிப் பெருமையுடன் நினைவுகூரவும் பேசவும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. எனினும் அதைப்பற்றி நான் ஏன் பேச வேண்டும்? காலம்.... காலம் பெருமாள்முருகனைப் பற்றி நிச்சயம் பேசும்.

ஈழத்து மண் கொடுத்த அற்புதங்களில் அ. முத்துலிங்கமும் ஒருவர். சுஜாதாவின் பெருமைகளைப் பாடிக்கொண்டு என்னிடம் வந்து “எதாச்சும் நல்ல புத்தகம்... சுஜாதா எழுதற மாதிரி இருந்தா சொல்லுங்களேன்?” என்பார்கள். முத்துலிங்கத்தின் “அங்கே இப்போ என்ன நேரம்?” கட்டுரைத் தொகுதியைத் தான் பரிந்துரைப்பேன். படித்துவிட்டு “அட்டகாசம் பண்ணி இருக்காருங்க அண்ணா...!” என்பார்கள். அதே அ.முத்துலிங்கத்தின் “வியத்தலும் இலமே” புத்தகத்தைப் பரிந்துரைப்பேன். அதிலுள்ள மேற்கத்திய ஆளுமைகளின் உரையாடலைப் படித்துவிட்டு, “ஹாசம்...! இது கட்டுரையும் இல்ல... உரையாடலும் இல்ல... மனுஷன் பின்னி இருக்குறாரு...!” என்பார்கள்.

“பாருங்க... இத எதுக்கு எங்கிட்டே சொல்றிங்க... முத்துலிங்கத்துடன் இணையத்தில் தொடர்புகொள்ள முடியும்... அவர் கிட்ட நீங்களே மின்னஞ்சலில் சொல்லிடுங்க” என்பேன்.

மகாபாரதம் சார்ந்த பரீச்சார்த்த முயற்சிகள் நிறையவே நடந்திருக்கின்றன. “எஸ்ரா, மகாஸ்வேதா தேவி, எம்.டி வாசுதேவன் நாயர், பைரப்பா” என பலரைப் பட்டியலிடலாம். சமீப காலங்களில் ஜெயமோகன் கூட சூளுரைத்துவிட்டு – ஒரு தவம் போல “வெண்முரசு” என்ற இணைய பாரதத்தை முயற்சித்து வருகிறார். சுமார் 10 வருடங்களுக்குத் தொடர்ந்து எழுதப் போகிறேன் என்று அறிவித்திருக்கிறார். அந்த வகையில் ஏறக்குறைய 9 ஆண்டுகளும் 6 மாதங்களும் ஜெமோவின் வாசகர்களுக்கு நல்ல தீனிதான். முதல் தொகுதி அச்சுப் புத்தகமாகவும் வந்துவிட்டது. மற்ற தொகுதிகள் ஒன்றன்பின் ஒன்றாக அச்சுக்கு வந்துசேரும் என்பதில் சந்தேகமில்லை. (மொத்தத் தொகுதியும் அச்சுக்கு வந்ததும் பார்த்துக்கொள்ளலாம் என்று நானிருக்கிறேன். விஷ்ணுபுரம் மாதிரி பேஜாரா இல்லாமல் இருந்தால் சரிதான்.) விகடனில் சாருகேசியின் மொழிபெயர்ப்பில் சில பாரதக் கதை சமந்தப்பட்ட புத்தகங்களும் கிடைக்கின்றன. அவையெல்லாம் கூட சுவாரஸ்யமான புத்தகங்கள்.

அதென்னமோ தெரியவில்லை...! புனத்தில் குஞ்சப்துல்லாவின் “மீஸான் கற்கள்” என்னுடைய ஆல் டைம் ஃபேவரைட் நாவல்களில் ஒன்று. இந்நாவலின் முதல் நூறு பக்கங்களில் தான் எத்தனை எத்தனை கதாப்பாத்திரங்கள் வந்து சேர்கிறார்கள். நாவல் முடியும் தருவாயில் இது ஒட்டுமொத்த சமூகத்தின் கதையாக இருக்கிறது. பாத்திரமாக நாவலில் இடம்பெறும் எல்லோரது கதையாகவும் இருக்கிறது. அதுவே இந்நாவலின் பலம். இந்திய மொழிகளின் சிறந்த படைப்புகளில் இந்நாவலும் நிச்சயம் ஒன்றாக இருக்கும். மலையாள மொழியில் இதுவரைக்கும் 35-க்கும் மேற்பட்ட முறைகள் மறுவெளியீடு கண்ட புதினம் இது. புனத்தில் குஞ்சப்துல்லாவின் ஒரு தீவிர ரசிகர் – இந்நாவல் ஒவ்வொரு முறையும் புதிதாக அச்சாகி வெளிவரும்போதும் – புத்தகத்தின் ஒரு பிரதியை வாங்கித் தன்னுடைய சேகரிப்பில் வைத்துக் கொள்கிறாராம். அந்த வகையில் ஒரே புத்தகத்தின் 35 பிரதிகள் ஒரு வாசகரின் சேகரிப்பில் இருக்கிறது. குஞ்சப்துல்லா கூட இதனைச் செய்திருக்க மாட்டார். ஒரு படைப்பாளிக்கு இதனினும் பெரிய மரியாதை என்ன வேண்டும்? எனினும், “மீஸான் கற்கள்” – மத்திய சாகித்ய அகாடமி மற்றும் மாநில (கேரள) சாகித்ய அகாடமி ஆகிய இரண்டு விருதுகளையும் ஒருங்கே பெற்றுள்ள நாவல் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் பேராசிரியரான ராஜ் கௌதமனின் “சிலுவைராஜ் சரித்திரம், காலச்சுமை” ஆகிய நாவல்களை இளங்கலை கல்லூரி படித்த சமயத்தில் உருகி உருகிப் படித்ததுண்டு. இவரது “லண்டனிலிருந்து சிலுவைராஜ்” ஹாஸ்யத் தன்மையில் எழுதப்பட்ட அருமையான பயண நூல். அயோத்திதாசர் பற்றிய ஆய்வு நூல், தலித்திய விமர்சனக் கட்டுரைகள் என பல்வேறு தளங்களில் இயங்கக் கூடியவர். இவரது தன்வரலாற்று நாவல்கள் அவசியம் வாசிக்கப்பட வேண்டிய ஒன்று. கேணிக்கு இவர் வந்திருந்தபோது பேச்சுவாக்கில் ஒரு கேள்வியைக் கேட்டேன்:

“உங்கள ரொம்ப ரிசர்வ்டு டைப்னு எல்லோரும் சொல்றாங்களே...! நீங்க வாசகர்களை அடிக்கடி சந்திக்கலாமே...!”

“ஏங்க... இப்போ உங்கக்கிட்ட ரிசர்வுடாவா பேசிட்டு இருக்குறேன்... அப்படி உங்களுக்குத் தோணுதா என்ன?” என்றார்.

“இல்லியே... நல்லாதானே பேசுறீங்க? அப்ப ஏன் அப்படி சொல்றாங்க...?” என்று கேட்டேன்.

“மொதல்ல தமிழ்ல வாசிக்கிறங்க கொறைவு... அதுலயும் என்னோட புத்தகங்கள வாசிக்கிரங்க ரொம்பக் கொறைவு... நான் எந்த இலக்கிய வட்டதுலையும் சேர்ந்துக்குறது இல்ல... அதனால நான் பேச மாட்டேன்னு நெனைகிறாங்க... ஆளுங்க கெடச்சா நல்லா பேசுறதுதான்...” என்றார்.

ராஜ்கௌதமனின் “நான் எந்த இலக்கிய வட்டதுலையும் சேர்ந்துக்குறது இல்ல...” என்ற வார்த்தைகள் நுட்பமாக கவனிக்க வேண்டிய ஒன்று. தலித் சமூகத்தில் மெத்தப் படித்தவன் எதிர்கொள்ளும் சமூக நெருக்குதல்களை இவரது தன்வரலாற்றுப் புதினங்கள் (சிலுவைராஜ் சரித்திரம், காலச்சுமை) முன்வைக்கின்றன. இப்புத்தகன்களைப் படிப்பதற்குக் கொஞ்சம் பொறுமை வேண்டும். பொறுமையுடன் வாசித்தால் நல்லதொரு வாசிப்பனுபவம் நமக்குக் கிடைக்கும். எழுத்தாளர் பாமா அவர்களின் மூத்த சகோதரர் தான் “ராஜ் கெளதமன்” என்பது நிறையப் பேருக்குத் தெரிவதில்லை. தமிழினி பதிப்பகம் தான் இவரது புத்தகங்களை வெளியிட்டார்கள். இப்பொழுது அவுட் ஆப் பிரிண்ட். ஒருவேளை நூலகங்களில் உங்களுக்குக் கிடைக்கக் கூடும்.

சிறுகதை என்று வரும்பொழுது கு.ப.ரா துவங்கி அசோகமித்திரன் வரையிலும் நிறைய எழுத்தாளர்களை நாம் நினைவு கூர்கிறோம். அவர்களில் பலரும் பல நூறுக் கதைகள் எழுதியவர்கள். ஆனால், மிகக் குறைந்த கதைகள் எழுதிய திலீப் குமார் மற்றும் ச. தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரும் தான் என்னுடைய மனதிற்கு உகந்த படைப்பாளிகள். (சக மனிதர்களாக இவர்கள் இருவரையும் உன்னதமான மனிதப் பிறவிகள் என்றும் கூடச் சொல்லுவேன். இதில், ச. தமிழ்ச்செல்வன் – எழுத்தாளர் கோணங்கி மற்றும் நாடகக்காரர் முருகபூபதி ஆகியோரின் சகோதரர்.) இருவருமே அவசியம் வாசிக்க வேண்டியவர்கள். முயற்சி செய்து பாருங்கள்.

ஒரு ரூல்சுன்னு போட்டாக்கா... அதனை முதலில் மீறுவது நானாகத் தான் இருக்கும். ஆகவேதான் தமிழ்மகனின் “வெட்டுப்புலி” நாவலை 11 படைப்பாக வரிசைப் படுத்தியிருக்கிறேன். சுவாரஸ்யமான விறுவிறுப்பான நாவல் இது. தமிழ்மகனுக்கான அடையாளத்தையும், பெருமையையும் ஏற்படுத்திக் கொடுத்த நாவல். இந்நாவல் குறிப்பிடத்தக்க சில விருதுகளைப் பெற்றுள்ளது.

எந்த யோசனையும் இன்றி லிஸ்ட் போட்டதில் இந்தப் புத்தகங்கள் தான் நினைவிற்கு வந்தன. மேலதிகமாக ஒரு விஷயத்தை நினைவுகூர விரும்புகிறேன். ஒரு புத்தகத்தைப் படித்துவிட்டு – மேற்படி அந்த எழுத்தாளரை சந்திக்க யோசித்ததே இல்லை. சந்திக்கக் கிடைத்தால் மகிழ்ச்சிதான். ஆனால் மெனக்கெட்டதில்லை. ஒருவர் மட்டும் இதில் விதிவிலக்கு... அந்த ஆஜானுபாகுவானவர் வேறு யாரும் அல்ல - பா. ராகவன்.

அரசு கல்லூரியில் இளங்கலை படித்துக் கொண்டிருந்த பொழுது இலக்கியபீடம் இதழில் “அலகிலா விளையாட்டு” நாவல் தொடராக வெளிவந்து கொண்டிருந்தது. மிகுந்த மனக் கொந்தளிப்பில் இருந்த காலங்கள். இந்நாவலுடன் ஏதோ ஒரு விதத்தில் பிணைப்பு. இந்த நாவலுக்காகவே இலக்கிய பீடம் இதழுக்ககக் காத்திருந்த நாட்கள் அவை. “இத எழுதன ஆள ஒரு நாள் நேருல பாத்துடனும்” என்று நினைத்துக்கொண்டேன். அதன்படி கிழக்கு அலுவலகத்தில் பாரா-வைப் சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்தது.

“இதுவரைக்கும் நான் யாரையும் பாக்கனும்னு ஆசப் பட்டது இல்ல... ஆனா... உங்கள ரொம்ப நாளா பார்க்கணும்னு நெனைச்சிட்டு இருந்தேன்...! நீங்க பல்லு போனக் கெழவனா இருப்பீங்கன்னு நெனைச்சேன். ஆனா இப்படி இருப்பீங்கன்னு எதிர்பாக்கல...” என்றேன்.

“அது சரி...” என்று சிரித்தார்.

பாராவுடன் உரையாடிவிட்டுக் கிளம்பும்போது, “இங்கப் பாருடா கிபி... தூரத்துல இருந்து பார்த்தா மணக்கும்... கிட்டக்க வந்துப் பார்த்தா எல்லாம் நாத்தம் தான். கிட்டவந்து மோந்துப் பாரு வேர்வ நாத்தம் அடிக்கும்... சரி போகட்டும்... நீ திஜாவோட ‘அம்மா வந்தாள்’ படிச்சிட்டியா? என்னோட நாவல விட நல்ல நாவல் அது... படிச்சிப் பாரு...” என்றார்.

அவரைப்பார்த்து சிரித்துவிட்டுக் கிளம்பினேன். “அம்மா வந்தாள்” – படித்ததுண்டு. எனினும், பின்னால் திரும்பிப் பார்க்கும் பொழுது “அலகிலா விளையாட்டு” ஏதோ ஒருவிதத்தில் என்னுடன் பின்னிப் பிணைத்த படைப்பு. மதி நிலையத்தில் தற்போது வாங்கக் கிடைக்கிறது. முயற்சி செய்து பாருங்கள்.

குறிப்பு 1 : இணையத்தில் நண்பர்கள் ஏதோ புத்தகம் சார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு தொடர் விளையாட்டுப் போல. மனதிற்கு நெருங்கியவர்கள் கை நீட்டி விஷத்தை அருந்தச் சொல்லிக் கேட்டால் கூட – நந்தா பட சூர்யா போலக் கேள்விகளற்று அருந்தக் கூடியவர்கள் நாம். விளையாடத் தானே அழைக்கிறார்கள். ஆகவே, சில புத்தகங்களைப் பற்றிப் பேசி இருக்கிறேன். என்னுடைய விருப்பப் பட்டியல் மிக நீண்டது. அவரவர் வாசிப்புத் தளம் பொறுத்து, புத்தகத் தேர்வு மாறுபடும். உங்கள் விருப்பம் உங்கள் கையில். உங்களுடைய மனதிற்குப் பிடித்த புத்தகங்களை வாசித்து மகிழுங்கள்.

குறிப்பு 2 : இப்புத்தகங்கள் யாவும் “மாணிக்கவாசகர், மீனாட்சி, க்ரியா, காலச்சுவடு, தமிழினி, சாகித்ய அகாடமி, பாரதி புத்தகாலயம், உயிர்மை, மதி நிலையம்” போன்ற பதிப்பகங்களில் கிடைக்கும்.

Sunday, June 22, 2014

சினிமா சிறுகதைகள்

1. ஸ்டுடியோ கதை – கு. ப. ரா
2. நடிகை மகள் – பிரமிள்
3. டூப் – விட்டால் ராவ்
4. பாக்ஸ் ஆபீஸ் – பாலு சத்யா
5. கதாநாயகி குளித்த கதை – பிரபஞ்சன்
6. குணச்சித்திர நடிகர் – வண்ணநிலவன்
7. நடிகன் – ஜி. நாகராஜன்
8. ஸோல்டன் ஃபேப்ரியும் தங்கச்சூரியும் – பாஸ்கர் சக்தி
9. அத்துவானக்காட்டு எருமைகளும் அசிஸ்டென்ட் டைரக்டரும் – சந்திரா
10. கதை – செழியன்
11. நீலப்படமும் சுசித்திராவும் – சுப்ரபாரதி மணியன்
12. ஒரு நட்சத்திரத்தின் தோல்வி – நா. பார்த்தசாரதி
13. ஊமைக்காயம் – நா. பார்த்தசாரதி
14. உள்ளூர் ஹீரோ – வல்லிக்கண்ணன்

அசோகமித்ரனின் புலிக்கலைஞன் எல்லோராலும் சிலாகிக்கப்படும் படைப்பு. ஆகவே அந்தச் சிறுகதையை இந்தப் பட்டியலில் சேர்க்கவில்லை. பொது நூலகதிலும், என்னுடைய புத்தக சேகரிப்பிலுமுள்ள சிறுகதைத் தொகுப்புகளின் தலைப்புகளை ஒரு யூகத்தின் அடிப்படையில் மேலோட்டமாக நோட்டம்விட்டு, அவற்றிலிருந்து இந்தக் கதைகளைக் கண்டெடுக்க நேர்ந்தது. இன்னும்கூட மெனக்கெட்டால், கைநிறைய சினிமாச் சிறுகதைகள் கிடைக்குமென்றே தோண்றுகிறது.

நா. பார்த்தசாரதியின் கதைகளுடன் ஒப்பிடுகையில் பிரமிளின் கதை தரமானது. பட்டியலில் இருக்கும் பெரும்பாலான கதைகள் உதவி இயக்குனர்களின் வாழ்வியலைச் சித்தரித்தாலும் – விட்டல்ராவின் “டூப்” ஸ்டான்ட் நடிகன் ஒருவனைப் பற்றிய கதை. துணை நடிகையின் ஒருநாள் நெருக்குதல் வாழ்வைச் சித்தரிப்பது பாலுசத்யாவின் “பாக்ஸ் ஆபீஸ்”. ஆபாச நடிகை, தனது மகளை பள்ளியொன்றில் சேர்க்கச் செல்லும் தருணத்தை அடிப்படையாகக் கொண்டது பிரமிளின் “நடிகையின் மகள்”. குணச்சித்திர நடிகன் இறந்த பிறகு, அந்த நடிகனிடம் உதவியாளராக இருந்த ஒருவனின் சிக்கல்கலைச் சித்தரிக்கிறது வண்ணநிலவனின் சிறுகதை. கு.ப.ரா, பிரபஞ்சன் போன்றோரது கதைகள் சினிமா ஷூட்டிங்கை அடிப்படையாகக் கொண்டவை. தொழில்நுட்பம் சார்ந்து திரைத்துறையில் பெண்களுக்கான இடம் மிகச் சிறியது. சந்திரா பெண் இயக்குனராக அமீரிடம் வேலை செய்தவர். ஆகவே, பெண் உதவி இயக்குனரின் சிக்கலை, ஷூட்டிங் சார்ந்து அவரது சிறுகதையில் பதிவு செய்திருப்பார். முன்னால் முதல்வரும், திமுக பெருந்தலைவருமான, மூதறிஞர் கருணாநிதியின் சிறுகதைகளில் ஒன்று சினிமா பற்றியது. முற்போக்கு திரைப்படத்தையும் சென்சார் போர்டு உறுப்பினர்கள் படத்தின் ரீலை வெட்டி எரிவதையும் பற்றிய நகைச்சுவைக் கதை. சிறுகதையின் தலைப்பு “புரட்சிக் படம்”

நவீன படைப்பிலக்கியத்தில் சினிமா சார்ந்த பதிவுகளைப் பற்றிக் கொஞ்சம் அலசலாமே என்று தோன்றியது. அசோகமித்ரனின் “கரைந்த நிழல்கள்” பலராலும் கொண்டாடப்படக் கூடிய படைப்பு. “மானசரோவர், தண்ணீர், புலிக்கலைஞன்” போன்ற அவரது பிற படைப்புகளிலும் சினிமா உலகம் பதிவாகியிருக்கிறது.

மானசரோவர் – முழுக்க முழுக்க ஒரு உச்ச நடிகனையும், அவனுடைய திரையுலக வீழ்ச்சியையும் ஒட்டியதொரு வாழ்க்கைச் சித்திரம். சுஜாதாவின் “கனவுத் தொழிற்சாலை”, ஜெயமோகனின் “கன்னியாகுமரி”, ஜெயகாந்தனின் “சினிமாவுக்குப் போன சித்தாளு”, தமிழ்மகனின் “ஏவிஎம் ஸ்டுடியோ – ஏழாவது தளம்” போன்ற படைப்புகளும் முழுக்க முழுக்க சினிமா சார்ந்த வாழ்வைத் தான் முன்வைக்கின்றன. அரந்தை நாராயணன் கூட இரண்டு குறுநாவல்கள் எழுதியிருக்கிறாராம். பத்திரிகையாளர் ஞாநி, அந்தக் குறுநாவல்களை தொலைக்காட்சிக்காகத் தொடராக எடுத்திருப்பதாக கேணி வாசகர் சந்திப்பில் பகிர்ந்துகொண்டார்.

தமிழ்மகனின் ‘வெட்டுப்புலி’ நாவலில் சினிமா எடுக்க ஆசைப்பட்டு, பொருளாதார ரீதியாக வீழ்ச்சியைச் சந்திக்கும் ஒரு சினிமா தயாரிப்பாளரின் வாழ்க்கை பதிவாகியிருக்கும். சமீபத்தில் வெளியீடு கண்ட வெல்லிங்டன் நாவலின் பிற்பகுதியில் சினிமா கம்பெனியில் ஆர்ட் டைரக்ஷன் (கலை இயக்கம்) துறையில் வேலை செய்யும் ஒருவன் - சினிமா தயாரிப்புக் கம்பெனியை இழுத்து மூடப்படுவதால் – வேறு வேலைக்குச் சென்று பிழைக்கும் ஒரு சிறுபகுதி பதிவாகியிருக்கும். குடைந்துகொண்டே சென்றால் இன்னும் கூட சில நாவல்களை இதுபோலக் கண்டடையலாம். மேல்தட்டு மக்களின் காஸ்மோபோலிடன் வாழ்வைச் சித்தரிக்கும் “என் பெயர் ராமசேஷன்” நாவலிலும் ஒரு நடிகையைப் பற்றிய பதிவுகள் கொஞ்சம் போல பதிவாகியிருக்கும். இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். “ரணம் சுகம்” என்ற மியூசிக்கல் நாவலை இலக்கிய அளவீடுகளில் கறாராக ஒப்பிட்டுப் பேச இயலாது. இந்நாவலில் சினிமா ஒலிச்சேர்ப்பு தொழில்நுட்பக் கலைஞன் ஒருவனது வாழ்க்கை டயரிக் குறிப்பு போலப் பதிவாகியிருக்கும்.

நாவலில் சினிமா சார்ந்த பதிவுகள் எனில் இத்தனை படைப்பாக்க முயற்சிகளைப் பற்றி நம்மால் பேச முடிகிறது. சிறுகதையில் சினிமா சார்ந்த பதிவுகள் என்று வரும்பொழுது அசோகமித்ரனின் “புலிக் கலைஞன்” மட்டுமே சிலாகித்துப் பேசப்படுகிறது. நடிகர், இயக்குனர் ரோகினி – “அசோகமித்ரனின் சினிமா சார்ந்த படைப்புகளில் - நடிகைகள் பற்றிய சித்தரிப்புகளைப் பற்றிக் குறைபட்டுக் கொண்டார். “சினிமா துறையில் நல்ல நடிகைகளே இல்லையா?” என்ற நுட்பமான கேள்வியை ரோஹிணி முன் வைத்தார். எல்லாத் துறைகளிலும் “நல்ல X கெட்ட” என்ற பாகுபாடு இருக்கும்பொழுது, “சினிமா நடிகைகளில் – பல சிக்கல்களுக்கு இடையிலும் வாழ்க்கையை நேர்மறையாக எதிர்கொள்ளும் நடிகைகள் இல்லையா?” என்ற ஆதங்கத்தைப் பதிவு செய்தார்.

ரோஹினியின் இந்த வருத்தத்தை நம்முடைய மரபுடன் இணைத்துப் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆடல் பாடல் போன்ற விஷயங்களில் தாசிகள் தான் துவக்கத்தில் ஈடுபட்டார்கள். குடும்பத்துப் பெண்கள் நடனம், இசை போன்ற துறைகளிலிருந்து சற்று விலகியே இருந்தனர். கோவில் திருவிழாக்களே ஆதிகாலத்தில் கொண்டாட்டங்களின் களமாக இருந்தது. அங்கெல்லாம் தாசிகள் தான் பங்கெடுத்தனர். நடனத்தில் வரும் காம அசைவுகளைச் “சிருங்காரம்” என்று தானே குறிப்பிடுகிறார்கள். இந்த மரபின் கண்கொண்டு நவயுக டிஜிட்டல் சினிமா நடிகைகளைப் பார்ப்பதால் தான் பிரச்சனை எழுகிறது. அதனால்தான் நடிகரையோ! நடிகையையோ! – ஊருக்கு நேந்து விட்டவர்களைப் போல நாம் பார்க்கிறோம். தாசிகள் பட்ட அவலம் சொல்லி மாளாதது. தாசிகள் முறையை ஒழிக்க, முதல் சட்டசபை பெண் உறுப்பினர் முத்துலக்ஷ்மி ரெட்டி கடுமையாகப் போராடியாது இன்றுவரையிலும் – நன்றியுடன் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று. பாடகிகளையும், நடனக் கலைஞர்களையும் – தேவதாசிகளைப் போலப் பார்க்கும் பார்வையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வந்துவிட்டோம். ஆனால், நடிகைகளைச் சமூகம் பார்க்கக் கூடிய கண்ணோட்டம் மிகக் கேவலமான ஒன்று. ஜனரஞ்சக இதழ்களும், புலனாய்வு வாரப் பத்திரிகைகளும் “நடிகையின் கதை”, “சினிமாக் கூத்து” போன்ற தலைப்புகளில் நிறையவே எழுதுகிறார்கள். கிசுகிசு பாணியில், ஆழ்மான இச்சைகளைச் சுரண்டி விடும் போலியான எழுத்துகள் இவையாவும்.

எழுத்தாளர் பிரபஞ்சன் ஒரு புத்தக வெளியீட்டில் பேசும்பொழுது “நடிகை” என்ற சிறுகதையைப் பற்றிப் பகிர்ந்துகொண்டார். ஒருவனது இரண்டு மனைவியர்களின் குணநலன்களைப் பற்றிய கதை. அதில், இரண்டாவது மனைவி திரைப்பட நடிகை. மறுபடியும் படத்தில் வரும் ரோஹினியின் அடாவடித் தனமான குணாம்சங்களை முதல் மனைவிக்கும், ரேவதியின் பெருந்தன்மையான குணாம்சங்களை நடிகையின் பாத்திரத்திற்கும் பொருத்தியது போன்ற கதை.

நடிகையை ஒருவன் அணைத்துக்கொண்டு வாழ்கிறான். அவனுடைய முதல் மனைவிக்கு இது தெரிந்து சண்டை போடுகிறாள். “சம்பாறிக்கறது எல்லாத்தையும் கொண்டுட்டு போயி அந்த நடிகை கிட்ட கொட்டுறையே? உங்கிட்ட வாழ்ந்து நான் என்னத்த கண்டேன். ஒரு சொத்து உண்டா? சொகம் உண்டா?” என்று கட்டிய கணவனை டார்ச்சர் செய்கிறாள். அவன் அப்படியொன்றும் பிரம்மாதமாக சம்பாதித்து விடவில்லை என்பது முதல் மனைவிக்கு நன்றாகவே தெரியும். நடிகையின் வீட்டிற்கு நேரில் சென்று சண்டையிடுகிறாள். “என் புருஷன மயக்கிட்டையே! நீ நல்லா இருப்பியா? நாசமாப் போக” என்பது போல தரக்குறைவான வார்த்தைகளைப் பேசுகிறாள். எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டுக்கொண்டு அழுகிறாள் அந்த நடிகை.

“இதுவும் கூட ஆக்டிங்” என்பதாகத் தான் நாம் நினைப்போம். ஏனெனில் அவள் நடிகையாயிற்றே. இப்படியே சண்டையிட்டு, முடிந்தமட்டும் பணத்தைப் பிடுங்குகிறாள் முதல் மனைவி. தனது கணவனால் தம்பிடிக்கு லாபல் இல்லை. நடிகையால் தான் எல்லாம் கிடைக்கிறது என்பதைத் தெரிந்தே இதையெல்லாம் செய்கிறாள் முதல் மனைவி.

சிறுகதையின் தலைப்பு “நடிகை”. வாசகர்கள் தான் அனுமானிக்க வேண்டும் இரண்டு பேரில் யார் “நடிகை” என்று? தனது கணவனை முன்னிறுத்தி, இன்னொருத்தியை ஏமாற்றுபவள் நடிகையா? அல்லது திரையில் தோன்றி ஆக்டிங் கொடுப்பவள் நடிகையா?

திரைத்துறையைச் சார்ந்த, அல்லது நட்சத்திரங்களுடன் தொடர்புடைய மாந்தர்களைப் பற்றிய உளபூர்வமான நிகழ்வுகளை அணுகும் சில நல்ல கதைகளும் தமிழில் இருக்கத்தான் செய்கின்றன. அதற்கு, மேலுள்ள பட்டியலிலிருந்தே சில உதாரணக் கதைகளை நம்மால் காட்ட இயலும்.

‘ஸ்டுடியோ கதை’ - கு. ப. ரா: கதையின் மையப்பாத்திரமான ஸீதா - எம்.ஏ பாஸ் செய்தவள். படித்தவர்களும் பண்பானவர்களும் திரைத்துரைக்கு வந்தால் தான், அதிலுள்ள புரையோடிப்போயுள்ள பெண் அடக்குமுறைகள் ஒழியும் என்பதில் நம்பிக்கை கொண்டவள். அப்படி நடந்தால் பிற நடிகைகளுக்கும் மதிப்பு கிடைக்கும் என்று நினைக்கிறாள். டைரக்டர் கிருஷ்ணன் – பெயருக்கு ஏற்றார்போல லீலை செய்பவன். போலவே, “பார்வதி பரிணயம்” என்ற படத்தை உஷா தியேட்டர்ஸ் தயாரிக்க, கிருஷ்ணன் இயக்குகிறான். படத்திற்கான புதுமுக நடிகையைத் தேடும் பொழுது ஸீதா அகப்படுகிறாள். ஆதிகாலத்தில் ரவிக்கை ஏது? ஆகவே, “பார்வதி பரிணயம்” என்ற படத்தில் ஜாக்கட் இல்லாமல் மேலாக்கில் புடவையைச் சுற்றி ஒட்டியாணம் போட்ட மேக்கப் அவளுக்கு.

“பொடவைய மாராக்குல ரொம்ப டைட்டா சுத்திட்டு இருக்க நீ! அதக் கொஞ்சம் லூஸ் பண்ணிக்கோ!” என்று அங்கேஇங்கே கையை வைக்க முயல்கிறான் டைரக்டர்.

“எதுன்னாலும் எங்கிட்டே சொல்லுங்க. நான் கரெக்ட் பண்ணிக்கிறேன். டச் பண்ணாதிங்க. மேலும், இது பார்வதி கதாப்பாத்திரம். அதுக்கு இந்த மாதிரி இருக்கறது தான் சரியாக இருக்கும்.” என்பதுபோல சீறுகிறாள் நடிகை ஸீதா.

“எனக்கு நீ டைரக்ஷன் சொல்லிக் கொடுக்குறியா?” என்று சொல்லி, ஒட்டியானத்தை லூஸ் செய்து மாராக்கைத் தளரவிடச் சொல்கிறான் டைரக்டர். ஓரளவிற்கு மேல் பொருக்க முடியாமல், ஒட்டியானத்தை முழுவதுமாகக் கழட்டி கையில் வைத்துக் கொண்டிருக்கிறாள் நடிகை. டைரக்டர் அவளிடம் சென்று பேச முயல்கிறான். அப்பொழுது ஒட்டியானத்தை டைரக்டரின் முகத்தில் வீசி எறிகிறாள் புதுமுக நடிகை. டைரக்டர் கிருஷ்ணனின் முகத்தில் காயம் ஏற்படுகிறது. அங்கிருந்து திரும்பிப் பார்க்காமல் சென்றுவிடுகிறாள் அவள். ஸ்டுடியோவின் வாசலை நோக்கி அவள் செல்கையில்:

“ஸ்டுடியோவிற்கு எதற்கு வருகிறாள் இந்தப் பதிவிரதை? கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை” என்று டைரக்டரின் முகத்தைத் தடவிக்கொண்டு உதவி இயக்குனர் கேள்வி எழுப்புவதாகக் கதை முடியும்.

‘டூப்’ - விட்டல்ராவ் – கிருஷ்ணராஜ் என்ற உச்ச நடிகனுடைய சண்டைக் காட்சிகளில் டூப் போடுகிறான் காசி. ஓர் அபாயகரமான காட்சியில் நடித்தபோது காசிக்கு விபத்து நேர்கிறது. மயங்கிய நிலையில் அவனை ஆஸ்பிட்டலில் சேர்ப்பிக்கிறார்கள். அவனது இடதுகால் நீக்கப்படுகிறது. மருத்துவச் செலவு முழுவதையும் உச்ச நடிகன் கிருஷ்ணராஜே ஏற்கிறான்.

கிருஷ்ணராஜ் தெலுங்கு நடிகை திவ்யாவை திருமணம் செய்து கொண்டவன். நீண்டகாலம் கழித்துதான் இந்த விஷயமே காசிக்குத் தெரியும். திருமணத்திற்குப் பிறகு அவள் நடிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டுக் குடும்பத்தைப் பார்த்துக் கொள்கிறாள். கிருஷ்ணராஜூக்கு வேறொரு குடும்பமும் இருக்கிறது. ஷூட்டிங் இல்லாத நாட்களில் காசி, கிருஷ்ணராஜின் வீட்டிலேயே தங்கிவிடுகிறான். டூப் போடவேண்டிய அவசியமில்லாத, வெளியூர் ஷூட்டிங்கிற்கு கிருஷ்ணராஜ் செல்லும்பொழுதும் நடிகையின் வீட்டிலேயே காசி இருக்கிறான். நடிகைக்கும் காசிக்கும் நட்பு ஏற்படுகிறது. இந்த விஷயம் கிருஷ்ணராஜூக்குத் தெரிந்து சந்தேகப்படுகிறான். அதன் பிறகுதான் டூப் போடும் காசிக்கு ஷூட்டிங்கின் போது விபத்து நேர்கிறது.

திவ்யாவின் தனிமைக்குக் காசி வடிகாலாக இருப்பதும், ஷூட்டிங்கில் காசிக்கு விபத்து நேர்வதையும் இழையாகக் கொண்ட ஐந்து பக்கச் சிறுகதை. கொஞ்சம் அசந்திருந்தாலும் கிளுகிளுபுக் கதையாக மாறியிருக்கக் கூடிய வாய்ப்பிருக்கும் கதை. ஆனால், விட்டல்ராவ் மனித மனங்களின் முரண்களை அருமையாக இந்தக் கதையில் வெளிப்படுத்தி இருப்பார்.

பாக்ஸ் ஆபீஸ் - பாலு சத்யா: நல்லதொரு மழைநாளில் துணை நடிகை மீனா ஷூட்டிங்கில் பங்கேற்கப் பழவந்தாங்கல் ரயில் நிலையத்திலிருந்து கோடம்பாக்கம் சென்று, அங்கிருந்து போரூருக்குச் செல்லப் பேருந்தைப் பிடித்து, ஷூட்டிங் நடக்கும் வீட்டிற்குக் கொஞ்சம் தாமதமாகப் போய்ச் சேருகிறாள். (கிண்டியில் இறங்கி போரூருக்குச் சென்றிருக்கலாமே! எதற்காகக் கோடம்பாக்கம் செல்லவேண்டும் என்ற சந்தேகம் சிறுகதையை வாசித்தபோது எழுந்தது. எனினும் நல்ல சிறுகதை.)

“வாம்மா மகாராணி... ஆச்சர்யமா இருக்குதே! ஹீரோயின் வரதுக்கு முன்னாடியே நீ வந்துட்ட போல இருக்குதே?” என்று தாமதமாக வந்த அவளை நோக்கி ஏளனக் கேள்விகள் பறக்கிறது. சிலர் அவளை உரசப் பார்கிறார்கள். தெரிந்த பெண்மணி உடல்நலம் விசாரிக்கிறாள். அன்றைய தினம் ஒரு பிணத்தைச் சுற்றி உட்கார்ந்து அழக் கூடியவர்களில் இந்தத் துணை நடிகையும் ஒருத்தி. ஹீரோயின் கதறியழ வேண்டிய சூட்டுக்குப் பல டேக்குகள் வாங்குகிறாள். மறுபடியும், மறுபடியும் காட்சியைப் படமாக்குகிறார்கள். இடையில் மீனாவுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. ஓடிச் சென்று தொலைபேசியில் அழைத்தவர்களிடம் பேசுகிறாள். நைட் ஷிப்டிற்குச் சென்றிருந்த அவளுடைய புருஷன் ஐயப்பனுக்கு ஆக்சிடென்ட் ஆகியிருக்கிறது.

“உன் புருஷனுக்கு ஆக்ஸிடன்ட் ஆயிடுச்சி. ரொம்ப சீரியஸ். உடனே வா...” என்கிறார்கள்.

“இங்க பாதியில விட்டுட்டு வர முடியாது. சாயந்திரம் வந்திறேன்” என்று தொலைபேசியைத் துண்டிக்கிறாள் என்பதாகக் கதை முடியும். துணை நடிகையின் சிக்கல் மிகுந்த பணிச்சூழலை, தன்மையான முறையில் முன்வைக்கும் கதை. ரசிக்கும் படியாக பாலுசத்யா எழுதியிருப்பார்.

நடிகை மகள் – பிரமிள்: “ஏ” படங்களில் நடிக்கக் கூடிய புகழ்பெற்ற நடிகை, தனது மகளை நான்காம் வகுப்பில் சேர்க்க ஒரு பள்ளிக்கு அழைத்து வருகிறாள். போஸ்டர்களில் மட்டுமே இதுவரை அந்த நடிகையைப் பார்த்த ஆசிரியையின் மனவோட்டத்தைப் பிரமிள் இக்கதையில் சொல்லியிருப்பார். பிரமிளின் மொத்தத் தொகுப்பில் ஜனரஞ்சகக் கதையாகத் தன் “நடிகையின் மகள்” சிறுகதையை வைத்திருக்கிறார்கள். ஆபாச நடிகையை மோசமாகவெல்லாம் இக்கதையில் சித்தரிக்கவில்லை. எல்லோரைப் போலவும் ஆபாச நடிகையும் சமூகத்தில் ஓர் உறுப்பினர்தான். அவளது மகளை – குழந்தையின் விருப்பப்படி நல்ல பள்ளியில் படிக்க வைக்கும் உரிமை அந்த நடிகைக்கு இருக்கிறது. நடிகையோ, ஆபாச நடிகையோ – திரைத்துறையைச் சார்ந்தவர்களைப் பற்றிய சமூகத்தின் பார்வைக்கு இக்கதையும் ஓர் உதாரணம்.

ஒவ்வொரு கதையைப் பற்றியும் இப்படி நிறையவே சொல்லிக்கொண்டு போகலாம். எனினும் அவரவர் வாசகத் தளத்தில், அவரவர் தன்மையில் இக்கதைகளை அணுகி, அது சார்ந்த கருத்துக்களை முன்னெடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். ஏனெனில் அசோகமித்ரனின் “புலிக்கலைஞன்” போலவே நம்மிடம் நிறைய ஆக்கங்கள் இருக்கின்றன. அக்கதைகளைப் பற்றிப் பேசவும் நாம் முன் வர வேண்டும். உதிரிக் கதைகளாக இருக்கும் வரை அதற்கான சாத்தியங்கள் பற்றிய சந்தேகமும் உடனே எழுகிறது.

“சினிமா சார்ந்த தரமான சிறுகதைகளைத் தொகுத்துப் புத்தகமாக வெளிக்கொண்டு வந்தால் என்ன?” என்ற யோசனையும் அடிமனதில் எழுகிறது. (வேறு யாரேனும் செய்வதற்கு முன் வந்தாலும் மகிழ்ச்சிதான்.) அடிப்படையில் நானொரு சோம்பேறி. அதனையும் மீறி இந்த யோசனை சாத்தியமானால் நன்றாகத் தான் இருக்கும். பார்க்கலாம் நடக்கிறதா என்று!.

“சினிமா நடிகைகளைப் பற்றி, நல்ல விதமாகச் சித்தரித்த ஒன்றிரண்டு படைப்புகளை இன்றைய கேணி சந்திப்பில் யாரேனும் பகிர்ந்துகொண்டால் மகிழ்ச்சியுடன் வீட்டிற்குச் செல்வேன்...” என்று ரோஹிணி ஆதங்கத்துடன் பேச்சினை நிறைவு செய்தபோது, “அரந்தை நாராயணன்” எழுதிய குறுநாவல்களை உடனே ஞாநி பகிர்ந்துகொண்டார்.

குங்குமம் தோழி இதழுக்காக நண்பரும், எழுத்தாளருமான பாலுசத்யா – நடிகை ரோஹினியின் பேச்சைப் பதிவு செய்ய - எனக்குப் பின்னிருக்கையில் அமர்ந்து நிகழ்வினை கவனித்துக் கொண்டிருந்தார். பாலுசத்யாவின் எல்லா சிறுகதைத் தொகுப்பையும் படித்துவிட்டு அதிலுள்ள ஒருசில கதைகளைப் பற்றி பாலுவுடன் நிறையவே பேசியதுண்டு. எனினும், எனினும் அன்றைய தினம் பாலுவின் “பாக்ஸ் ஆபீஸ்” எனக்கு ஞாபகம் வராமல் போனதேன்?

“ரசிகர்களின் (பார்வையாளர்களின்) மறதி கலைஞர்களின் சாபம்” என்ற வாசகம் தான் நினைவிற்கு வருகிறது. அந்த வகையில் நம்மால் சபிக்கப்பட்ட ஏராளமான படைப்பாளிகள் நம்மிடையே உண்டு. எளிய மனிதர்களால் இலக்கிய சங்கம விழாவையா எடுக்க முடியும்.! மீள் வாசிப்பின் மூலம், கடலின் மடியில் கேட்பாரற்றுக் கிடக்கும் முத்துக்களை எடுப்பதுபோல – மீள் வாசிப்பில் கவனமற்றுக் கிடக்கும் இதுபோன்ற கதைகளுக்கு கவனம் கொடுப்போமே. முயற்சி செய்யுங்கள்...! உங்களால் நிச்சயம் முடியும்.

குறிப்பு: நண்பர்களுக்குத் தெரிந்து, வேறு ஏதேனும் சினிமா சார்ந்த சிறுகதை ஆக்கங்கள் இருப்பின் கமென்ட் செய்யுங்கள். அவற்றையும் பதிவின் பட்டியலில் இணைத்து விடுகிறேன். நாவல்களாக இருப்பினும் தெரியப்படுத்துங்கள்.

பட்டுக்கோட்டை பிரபாகரன் எழுதிய “சிவா – சினிமா – விசு – ஃபோட்டோ”, புரட்சிக் கலைஞர் மூதறிஞர் கருணாநிதியின் “புரட்சிப் படம்” போன்ற க்ளிஷியே கதைகளாக இருப்பினும் தெரியப்படுத்தலாம். அவற்றையெல்லாம் வாசித்துவிட்டுத் தனியாக ஒரு பதிவினைக் கூட எழுதலாம்.

நன்றி.

Friday, June 20, 2014

நான் வயதுக்கு வந்தபோது

“அரச்ச சந்தனம்
மணக்கும் குங்குமம்
அழகு நெத்தியிலே...” – எனச் சின்னத்தம்பி பிரபு போல முகத்தில் சந்தானம் பூசிக்கொண்டு, வெகுளித்தனமாகக் கல்லூரிகளில் இரட்டை அர்த்தத்தில் பேசிக்கொண்டு திரிந்தபோது போது அம்பையைப் பொதுநூலகத்தில் வாசித்தது. கல்லூரி வயதிற்கே உரிய ஆர்வத்தில் சிறுகதையின் சில பகுதிகளை ஆர்வத்துடன் மீண்டும் மீண்டும் வாசித்ததுண்டு. நாள்பட நாள்படத் தான் ஒருசில விஷயங்களின் உண்மைத் தன்மை புரிகிறது. காலயந்திரம் நம்மை அலாக்காகத் தூக்கிக்கொண்டு வந்து வேறொரு தளத்தில் நிருத்தி இருப்பதையும் உணர முடிகிறது.


எழுத்தாளர் அம்பையுடன் இணையத்தில் பேசிக் கொண்டிருக்கையில் அவரது மூன்று கதைகள் ஞாபகத்திற்கு வந்தது. “வீட்டின் மூலையில் ஒரு சமையலறை” என்ற கதையைத் தான் பெரும்பாலும் வாசகர்கள் குறிப்பிட்டுப் பேசுவார்கள். சிறுகதைத் தொகுப்பின் தலைப்பாக அமைந்ததாலோ என்னவோ அக்கதை பரவலாகப் பேசப்படுகிறது. அந்தக் கதையும் கூட முக்கியமானக் கதைதான். எனினும், என்னுடைய நினைவின் அடுக்குகளில் “வெளிப்பாடு, புனர், சில மரணங்கள்” ஆகிய மூன்று கதைகள் தான் மேகத்தின் பின் ஒளிரும் மின்னலென மின்னி மறைகிறது. நேற்றைய தினம், பெருமாள் முருகனும் சில புத்தகங்களைப் படிக்குமாறு மின்னஞ்சல் செய்திருந்தார். அந்தப் பட்டியலிலிருந்த முதல் பெயர் அம்பை தான்.

க்ரியா பதிப்பகம் வெளியிட்ட அம்பையின் 11 சிறுகதைகள் அடங்கிய புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருந்தேன். (காலச்சுவடு அம்பையின் முழுத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார்கள்.)

“வெளிப்பாடு” – தாமிரவருணி கரையோரத்திலுள்ள ஊருக்குப் பெண்களைப் பற்றி ரிப்போர்ட் எடுப்பதற்காக ஒருத்தி வருகிறாள். அந்தப் பயணத்தில் சந்திக்கும் இரண்டு பெண்களுடனான உரையாடலால் நகரும் கதை. அம்பையின் சிறுகதைகளில் மிகப்பிடித்த கதைகளில் இதுவும் ஒன்று. பொதுவில் குளிப்பதும், உடைமாற்றிக் கொள்வதும் குளத்திலும், ஆற்றிலும் குளிப்பவர்களுக்கு இயல்பான ஒன்று. புதிதாக வருபவளுக்கு அந்தப் பழக்கம் இல்லையே!. ஆற்றில் குளிக்குமாறு உடன் அழைத்து வந்தவன் சொல்கிறான்.

“ஐயோ! எனக்கு அங்கெல்லாம் குளிக்க வராது.”

“அய்ய! ஒண்ணுமில்லிங்க எத்தன பேரு குளிக்கிறாங்க பாருங்க.”

மார்பில் பாதித்துணி. மீதி, கல்லில் பட் பட். நீர் தெறித்தது. மஞ்சள் கன்னங்களும், பாதங்களும் ஈரத் தொடைகளும். ஈர முடி முதுகில். தலைப்பை வாயில் கவ்வி நொடியில் ரவிக்கை ஏறியது. மின்னல் மாதிரி இடையும், பின்பகுதியும் பளீரிட்ட பின், மந்திரம் போட்டதுபோல் புடவை இடுப்பில்.

முடியாது. அவளுக்கு நிறைய விஷயங்கள் இருந்தன அணிந்துகொள்ள. எளிமையானவை அல்ல. திறந்தவெளியில் அவிழ்க்கவும் போடவும். (பக்கம்: 2)

“தலைப்பை வாயில் கவ்வி நொடியில் ரவிக்கை ஏறியது.” - அவளொரு தொடர்கதை திரைப்படத்தில் நடிகை சுஜாதா புடவையின் முந்தானையை வாயில் கவ்வியபடி உள்ளாடை மாற்றும் சிறு காட்சியை எப்பொழுதாவது தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்தால், எனக்கு அம்பையின் இந்த வரிகள் தான் ஞாபகத்திற்கு வரும். ரிப்போர்ட் எடுக்க வந்தவள் பொதுவில் குளிக்க முடியாது என்று சொல்லவும், ஒரு வீட்டின் சமையலறை மூலையில் ரிப்போர்ட் எடுக்க வந்தவள் குளிக்க நேர்கிறது. குளித்து முடித்து உடைமாற்றிக்கொள்ள சங்கடப்படுகிறாள். இனி அந்தப் பெண்ணின் குரலில் அம்பை:

“உள்ளாடைகளை எப்படி அணிவது என்று யோசித்தாள்.”

தோசை வெச்சுட்டு வாரேன் அவுகளுக்கு... சாப்பிடச் சாப்பிட வெக்கணும். இல்லாட்டா மூக்கு மேல கோவம் புசுக்குன்னு. ஒரு அறை வெச்சார்னா.” சிரித்தள். வெளியே விரைந்தாள் வாழை இலையுடன்.

வேகமாக உடைகளை அணிந்தாள். சரியாகத் துடைக்காத உடம்பில் ரவிக்கை சுலபமாக ஏறவில்லை. முழங்கை அருகே பிடித்தது.

இதுபோன்ற சின்னச் சின்ன நுட்பங்கள் அம்பையின் இச்சிறுகதையில் வெளிப்பட்டிருக்கும். கிராமத்துப் பெண்களின் மீதான ஆணாதிக்க வெளிப்பாடு, கிராமத்துப் பெண்களுடைய உளப்பூர்வமான நேசத்தின் வெளிப்பாடு, நகரத்து நாகரீகப் பெண்ணின் கூச்ச வெளிப்பாடு, கிராமக் கலாச்சார விருந்தோம்பலின் நெகிழவைக்கும் வெளிப்பாடு என பலநிலைகளில் இக்கதையைப் பொருத்திப் பார்க்க முடியும். கதையின் ஓரிடத்தில “தீட்டானால் குளிக்கும் இருட்குகை ஸ்நான அறையைக் காட்டினாள்” என்ற ஒற்றை வரியில் அம்பை கடந்து சென்றிருப்பார்.

தாமிரபரணி கிராமத்துப் பெண்கள் பொதுவன நீர்நிலையில் குளிப்பவர்கள். அவர்கள், மாதவிடாய் சமயத்தில் இயல்பு வாழ்க்கையின் மைய நீரோட்டத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள். அவற்றையே இந்த ஒற்றை வரியில் கடந்து செல்கிறார் அம்பை. மாதவிடாய் சார்ந்த பதிவுகளை சமீபத்தில் மூன்று நாவல்களிலும், ஒரு மொழிபெயர்ப்புக் கவிதையிலும் படிக்க நேர்ந்தது. அவற்றைக் கிளறி விட்டன அம்பையின் வரிகள்.


முதலில் “மாதொருபாகன்” பற்றிப் பேச வேண்டும். குழந்தையில்லாத் தம்பதிகளான ‘காளி – பொன்னா’ ஆகியோரின் மன உளைச்சலையும், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலின் ‘அஜால்குஜால்’ திருவிழாவைப் பற்றியும் ஒருசேர முன்வைக்கும் பதிவு இந்நாவல். கூவாகம் திருவிழாவானது திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் சார்ந்தது எனில், ‘மாதொருபாகன்’ இரவுநேரத் திருவிழா – திருமணமாகிப் பல ஆண்டுகள் தாய்மை அடையாத பெண்ணையும், மலைமேல் வீற்றிருக்கும் சாமியாக வேஷம் போட்டு, முகமெல்லாம் சந்தானம் பூசி மறைத்துக்கொண்டு, பரிச்சயமில்லாதப் பெண்களுடன் உடலுறவு கொள்ள வரும் ஆண்களையும் பற்றியது. சின்னத்தம்பி படத்தில் வரும் பிரபு கன்னத்தில் சந்தனம் பூசிக்கொண்டு ஆடுவதற்கும், ஊரிலுள்ள ஆண்களெல்லாம் இந்தத் திருவிவைச் சாக்கிட்டு முகம்முழுக்க சந்தம் பூசிக்கொண்டு விடியவிடிய காமக் களியாட்டம் ஆடுவதற்கும் நிறைய விதயாசங்கள் இருக்கிறது. இத்திருவிழாவின் சிறப்பே அதுதான். பதினான்கு நாள் திருவிழாவின் ஒருநாள் இரவு மட்டுமே இந்தச் சலுகை. இந்தக் கலாச்சாரச் சடங்கையும், குழந்தையில்லா தம்பதிகளின் மன உளைச்சலையும் ஒருசேர முன்வைக்கும் பதிவாகவும் கொள்ளலாம்.


“இந்த மாசமாவது தூரம் தள்ளிப் போகாதா? ஒரு புழு பூச்சி என் வயித்துல தங்காதா?” என்று பொன்னா இந்நாவலின் சில இடங்களில் ஏங்குவாள். பொன்னாவின் புலம்பலைக் கேட்கையில் பாவமாகத் தான் இருக்கும். ‘பாவாத்தா’ கண்ணைத் திறந்தாள் தானே!

’மாதொருபாகனின் முன்னட்டை வடிவமைப்பைப் பற்றி இங்கு பேசியே ஆகவேண்டும். டிசைனர் சந்தோஷ் – இந்தப் பாவியை என்ன செய்யலாம்? பளாரென கன்னத்தில் அறையலாமா?. அந்த அளவிற்கு மகிழ்வை உண்டாக்கக் கூடியவர். ஒரு தேர்ந்த வாசகன் டிசைனராக வரும்பொழுது, புத்தக முன்னட்டையை எவ்வளவு சிறப்பாக அர்த்தத்துடன் வடிவமைக்க முடியும் என்பதற்கு – சிஸ்டர் ஜெஸ்மி எழுதிய ‘ஆமென்’ சுயசரிதையின் தமிழ் மொழிபெயர்ப்பு, ஜே.பி. சாணக்யாவின் ‘முதல் தனிமை’, பெருமாள்முருகனின் ‘மாதொருபாகன்’ போன்ற புத்தகங்களின் முன்னட்டைகளை உதாரணமாகச் சொல்லலாம்.

ரத்தச் சிவப்பை ஆக்ரமித்த முன்னட்டையில் அர்த்தனாரியின் முண்டத்தை மாதொருபாகன் முகப்பட்டையில் வைத்திருப்பார் சந்தோஷ். அர்த்தனாரியின் முழு உருவத்தையும் வைத்திருக்கலாமே! எதற்குக் கழுத்தறுத்து வைக்கவேண்டும்? சடங்கு என்ற பெயரில் கடவுளின் கழுத்தை இம்மக்கள் அறுக்கிறார்கள் என்பதாலா?. “வறடன் – வறடி’, ‘மலடன் – மலடி’ என சக மனிதர்களின் ரத்தத்தைக் குடிக்கக் குழந்தையில்லாத் தம்பதிகளைக் கூறு போடுகிறார்களே அதனாலா?. புத்தக முன்னட்டையில் ஓடுவது யாருடைய ரத்தம்? கற்பம் தங்காத பெண்களின் மாதவிடாய் ரத்தமாகத் தான் எடுத்துக்கொள்ளத் தோன்றுகிறது. பொன்னாவும் அவர்களில் ஒருத்தி தானே!.

ஹிந்தி எழுத்தாளர் நிர்மல் வர்மாவின் ‘சிவப்புத் தகரக் கூரை’ – ஒரு சிறுமியின் வாழ்வை அவளது பயணத்தினூடே முன்வைப்பது. இந்நாவலின் கதை பின்வருமாறு முடிகிறது:

ரயில்வண்டி என் கண்களில் பட்டது. ஒரு பயங்கரமான வேதனை அலை என் உடலை உடைத்துக்கொண்டு வெளியேறியது. என்னுடைய கை தொடைகளுக்கு நடுவில் அந்த வலியைத் தேடத் தொடங்கியது. பிசுபிசுப்பான வெதுவெதுப்பான ரத்தம் தோய்ந்த ஒன்று பொங்கி வந்தது. என்னுடைய தொடைகளுக்கு நடுவிலிருந்து பெருகிய அது புழுதி படிந்த என் முழங்கால்களில் மாதுளைச் சாறு போலப் படியத் தொடங்கியது. புதர்களுக்குப் பின்னாலிருந்து யாரோ குசுகுசுத்தபடி சிரிப்பது போலிருந்தது. திடுக்கிட்டுப்போய் நான் என்னுடைய சிவந்த பிசுபிசுப்பான கைகளைப் புல்லில் துடைக்கத் தொடங்கினேன். அப்போதுதான் எனக்கு இந்தப் புற்களுக்கும் புதர்களுக்கும் நடுவில்தான் கின்னியின் ரத்தமும் சிந்தியிருக்கும் என்று எண்ணம் வந்தது. உடனே நான் சுரங்கத்திலிருந்து விலகி மேலே ஏறத் தொடங்கினேன். புற்களாலும் கற்களாலும் மூடப்பட்ட ஒற்றையடிப்பாதையில் தடுமாறி விழுந்து ஓடத் தொடங்கினேன்.

பிறகு எனக்கு அந்தப் பாறை கண்ணில் பட்டது. நான் நின்றேன். சட்டென்று நான் பாரமற்று இருப்பதுபோலவும் அனைத்திலிருந்தும் விடுபட்டவளாய்த் தூய்மையானவாளாய் உணர்ந்தேன். இதுவரையிலான எனது உலகம் எப்போதைக்குமாக மறைந்துபோய்விட்டது. அதன்மீது முளைத்தெழுந்திருக்கும் வசந்தத்தின் புற்களாலும் சகதியில் அழுக்குடன் உருகிக் கிடக்கும் பனியிலும் என்னுடைய ரத்தத்தை நான் கழுவிக்கொண்டேன். புல்லின் மீது நான் புரண்டுகொண்டிருந்தேன். அப்போது நான் நானாகி இருந்தேன். கடவுளை அடைந்து நான் அவனையும் கடந்துபோயிருந்தேன்.

(சிவப்புத் தகரக் கூரை – நிர்மல் வர்மா – பக்கம்: 268, காலச்சுவடு பதிப்பகம்)

கடந்த ஆண்டு வெளிவந்த ஸர்மிளா செய்யித்தின் “உம்மத்” நாவலிலும் ஒரு சிறு பகுதி வருகிறது. “பெண்குறியில் இருந்து திடீரென வெளிப்பட்ட இரத்தப் பெருக்கு கால்களுக்கிடையே வடியத் தொடங்கியது. இரண்டு தினங்களாக நிம்மதியிழந்து போயிருந்தாள். ஏதோ தீர்க்கவொண்ணாத நோயின் அறிகுறி என்கிற ஊர்ஜிதத்தில் நொய்ந்துபோனாள்”. (பக்கம்: 48)

யுவ புரஸ்கார் விருதுபெற்ற மலர்வதியின் ‘தூப்புக்காரி’ நாவலிலும் தூமைத்துணி அலசும் சில பகுதிகள் வரும். நாவலின் மொழிநடை சிறப்பாக இல்லாததால் தொடர்ந்து படிக்க முடியாமல் போனது. அவகாசம் எடுத்து, கடினப்பட்டாவது ஒரு மேய்ச்சல் பார்வையில் படித்து முடிக்க வேண்டும்.

சென்னையை விட்டு வெளியில் வசிக்கும் எழுத்தாள நண்பரொருவர் “இருபதாம் நூற்றாண்டின் தெலுங்குப் பெண் எழுத்தாளர்கள்” புத்தகத்தை வாங்கி அனுப்புமாறு கேட்டிருந்தார். சாகித்திய அகாதெமி வெளியிட்ட புத்தகம். நண்பருக்குக் கொரியர் செய்வதற்கு முன்பு ஓர் ஓட்டு ஓட்டிவிடலாம் என்று புரட்டத் துவங்கினேன். ஏராளமான எழுத்துப் பிழைகள் கண்ணில் பட்டன. போலவே, பக்கம்: 85-ல் ஒரு கவிதையும் காணக்கிடைத்தது.

நான் வயதுக்கு வந்தபோது – கே. கீதா

உடம்பு முழுவதும் ஓரிடத்தில்
உருண்டை கட்டியபோது
ஒரு அந்தரங்கமலை நிசப்தமாய்
வெடித்துச் சிதறும் போது
வலியை உள்ளங்கையில் தாங்கிக்கொள்ள
முயற்சிகள் மேற்கொண்டபடி...
திடீரென ஓர் அதிர்வு பீறிட்டது
என்னுள் நானே
திடமெனும் நான் திரவமாகி
மீண்டும் இறுகி
துண்டுகளானேன்
மாதத்திற்கொருமுறை வேறு வழியற்று
என்னை நான் வலியாய்
மாற்றிக்கொள்ள வேண்டி வந்து...
செத்து...
மேலே மிதக்காத காயத்திற்கு
‘பிளாஸ்டர்’ போடவியலாது
பக்க எலும்புகளை நொறுக்கி மாவாக்கவியலாது
முடங்கிக் கிடந்து மூழ்கிப்போக
முடிவெடுத்துள்ளேன்
முப்பத்தியாறு மணிநேரச் சோர்வை
அப்படியே அழுத்திக் கொண்டு
தவிர்க்கவியலாத் தீண்டாமையாய்
இருக்கவியலாது
நாகரிகத்துள் நான்கடி முன் நடந்து
தளர்ந்துபோனேன்... நீர்த்துப் போனேன்
ஓட்டமும் நடையுமாய்
பாதிவேலைகளை முடிக்கவியலாது
முதுகெலும்பை சம்மட்டியாலாவது
நீட்டித்துக் கொள்ள
இரும்புச் சங்கிலிகளாலாவது இம்சையை
கட்டிப் போடவேண்டுமென்றிருகிறது
மீண்டும் மீண்டும்
முப்பது நாட்களுக்கொருமுறை
மறுபிறவி எடுத்தபடி...
குடலை முறுக்கிப் பிழியும்
வலிமிகும் பொழுது
இப்பொழுது
- (நீலமேகாலு) ‘நீலமேகங்கள்’ 1993

துரியோதனிடமும், சகுனியிடமும் விளையாட்டில் தோற்று பஞ்சபாண்டவர்கள் சூதர்களாக மறைந்து வாழ்கிறார்கள். விராடநாட்டு அரசனுக்குப் பணியாளாக வேலைக்குச் சேர்கிறான் யுதிர்ஷ்டன். விராட தேசத்துப் பட்டமகிஷியின் பணிப்பெண்ணாக திரௌபதி இருக்கிறாள். விராட அரசனும், யுதிர்ஷ்டிரனும் தாயம் விளையாடிக் கொண்டிருக்கையில், ஏனென்று தெரியாமல் கையில் கிடைத்தப் பொருளை எடுத்து யுதிர்ஷ்டிரனின் முகத்தில் மீது வீசி எறிகிறான் அரசன். அது தர்மனின் நெற்றியில் பட்டு ரத்தம் பீறிடுகிறது. பணிப்பெண்ணாக அரண்மனையில் வேலை செய்யும் திரௌபதி, அருகிலிருக்கும் கோப்பையை எடுத்துக்கொண்டு தர்மனிடம் ஓடுகிறாள். துளித்துளியாகச் சிந்தும் ரத்தத்தை அந்தக் கோப்பையில் ஏந்துகிறாள்.

விராட அரசன் கேட்கிறான்: “என்ன செய்கிறாய் பெண்ணே...!”

“இவரது ரத்தம் சிந்தும் பூமி புல்பூண்டு முளைக்காமல் நாசமாய்ப் போகும்...!” என்கிறாள் தர்மனைப் பார்த்து. விராடனுக்கு ஒன்றுமே புரியவில்லை. மறைந்து வாழும் தாங்கள் யாரென்று தெரிந்து கொள்ளாமல் இருக்க தர்மன் ஏதேதோ சொல்லிச் சமாளிக்கிறான்.

மாதவிலக்காகி ஒற்றையாடையில் கிடக்கிறாள் திரௌபதி. சூதில் அவளை வைத்து விளையாடி பாண்டவப் புத்திரன் இழந்தான் என்பது அதுவரையில் திரௌபதிக்குத் தெரியாது. தலைமுழுகி கூந்தலில் விரல்நுழைத்து ஈரத்தை உலர்த்திக் கொண்டிருக்கிறாள் அவள். வேறொரு கை கூந்தலைப் பற்றவும் யாரென்று கருங்கூந்தலை விளக்கிப் பார்க்கிறாள். துச்சாதனன் இதழில் புன்னகை தழுவ நின்றுகொண்டிருக்கிறான்...!

“நீசனே...! விலக்கான பெண்ணைத் தொடுவது பாவமில்லையா? என்னுடைய கணவர்களுக்குத் தெரிந்தாள் உன் சிரசு உடம்பில் இருக்காது...!” என்கிறாள்.

“ஆங்.. கிழிச்சானுங்க... அந்த அடிமை நாய்கள் மண்டியிட்டுக் கிடக்கிறார்கள். நீயும் அடிமையானாய். மகாராணி என்ற நினைப்பில் பேசாதே” என்றவாறு கூந்தலைப் பற்றித் தரதரவென சபைக்கு நடுவில் ஒற்றையாடையுடன் இழுத்துக்கொண்டு செல்கிறான் துச்சாதனன். திரௌபதியின் தூமை உதிரம் வழியெல்லாம் சிந்தியிருக்க நிறையவே வாய்ப்புகள் உண்டு. ஒற்றையாடையில் அவள் சிந்திய ரத்தமே இதிகாசத்தில், இலக்கியத்தில், படைப்பில் பதிவான முதல் மாதவிடாய்ப் பதிவாக இருக்க வேண்டும். அதன் தொடர்ச்சியாகத் தான் மேலுள்ள பதிவுகளைப் பார்கிறேன். இதில் நிர்மல் வர்மாவும், பெருமாள் முருகனும் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பெண்களின் பிரச்னையை ஆண்கள் பேசக்கூடாதா என்ன?

இந்த காலத்துச் சிறுமிகள், சிறுவயதிலேயே பெரிய மனுஷி ஆகிவிடுகிறார்கள். சிக்கலான விஷயம் தான். எனக்குத் தெரிந்த “ஆறாவது, ஏழாவது” படிக்கும் இரண்டு சிறுமிகள் சென்ற மாதத்தில் பூப்படைந்ததாகக் கூறினார்கள். பாவம் என்று நினைத்துக் கொண்டேன். உறவினர்களோ, “தனக்குத் தந்தன... தனக்குத் தந்தன... தனக்குத் தந்தனன...!” என்று ரெக்கார்ட் போட்டு விழாவையே சிறப்பாக முன்னெடுகிறார்கள். யாருக்கு...? பன்னிரண்டு வயது சிறுமிகளுக்கு...! ஆறுமாதங்களுக்கு முன்பு பெரம்பூரிலிருந்து பாரிமுனை நோக்கிச் சென்றுகொண்டிருந்தேன். காதணி விழாவுக்குக் கவர்னர் ராசைய்யா சிறப்பு விருந்தினராக வருகைத் தருவதாகத் தட்டி வைத்திருந்தார்கள். இதெல்லாம் நம்முடைய கலாச்சாரத்தின் ஒரு பகுதி. மஞ்சள் நீராடு விழாவும் அப்படித் தானே!

கடந்த புத்தகக் கண்காட்சியில் ‘திரு’ – அவனுடைய ஒன்பதாவது படிக்கும் தங்கையை அழைத்துக்கொண்டு வந்திருந்தான். காலச்சுவடு அரங்கிற்கு வந்தவன், “அண்ணா... இவளுக்கு ஏதாச்சும் புக்ஸ் எடுத்துக்கொடுங்க? உங்களைக் காமிக்கத் தான் அவளக் கூட்டிட்டு வந்தேன்...!” என்றான். சிறுவர்களுக்காகக் காலச்சுவடு வெளியிட்டிருந்த சில புத்தகங்களை எடுத்து அவளிடம் கொடுத்தேன். மறுபடியும் அரங்கிற்குள் சென்றவள் ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு வந்து என்னிடம் நீட்டினாள். அது “வற்றும் ஏரியில் மீன்கள்” என்ற அம்பையின் சிறுகதைத் தொகுப்பு.

“இந்த வயசுல அம்பையைப் படிப்பாளான்னு தெரியலையேடா...!” என்றேன் திருவைப் பார்த்து.

“இல்ல... நான் எடுத்துக்குறேன்...” என்று கிளம்பிச் சென்றாள் அந்தச் சிறுமி.

இந்த காலத்துல தான் சின்ன வயசுலயே பெரிய மனுஷி ஆயிட்றாளுங்களே...! நாமென்ன சொல்ல...! இவர்கள் எல்லோரும் அம்பையை அவசியம் படிக்க வேண்டும். வாய்ப்பிருந்தால் “வெளிப்பாடு” சிறுகதையை நீங்களும் படித்துப் பாருங்கள். உங்களுக்கு அந்தக் கதை நிச்சயம் பிடிக்கும்.

1. வீட்டின் மூலையில் ஒரு சமையலறை - க்ரியா பதிப்பகம்
2. அம்பையின் முழுத்தொகுப்பு - காலச்சுவடு பதிப்பகம்
3. வற்றும் ஏரியின மீன்கள் - காலச்சுவடு பதிப்பகம்
4. தெலுங்குப் பெண் எழுத்தாளர்கள் - சாகித்ய அகாதெமி
5. தூப்புக்காரி - அனல் வெளியீடு
6. மாதொருபாகன் - காலச்சுவடு பதிப்பகம்
7. உம்மத் - காலச்சுவடு பதிப்பகம்